காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி 
குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு 
எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் 
எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட 
வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் 
பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன்.
      நான்
 ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் 
பதிலாக, குருட்டுத்தன மான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர்.
      இரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
      தனது
 உடையை மாற்றுவதன் மூலமாகவே மட்டும் இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு 
மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் 
கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதார ணமான உன்னதமான செயல்களைச் செய்த 
போதி லும், யாரும் உங்களைக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கமான முறையில் 
நடக்காத ஒருவர், சில விநோத மான போக்குகளைக் காட்டினால் - தனது பண்பாட்டில் 
இயற்கைக்கு மாறான குணங்களைக் கொண்டிருந் தால், அவர் ஒரு மகான் அல்லது ஒரு 
மகாத்மா ஆகி விடுகிறார்.
நீங்கள் 
வழக்கமான ஒரு சாதாரண உடையணிந்து கொண்டு ஏதாவது செய்திருந்தால், மக்கள் 
உங்களைப் பார்க்கவும் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அதே ஆள், தனது 
ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, நிர் வாணமாக ஓடினால், நீண்ட முடிவளர்த்துக் 
கொண்டு, மக்களைக் கேவலமாகப் பேசி, சாக்கடையிலிருந்து அசுத்தமான தண்ணீரைக் 
குடித்துக் காட்சியளித்தால், மக்கள் அவருடைய காலில் விழுந்து, அவரை வழி 
படுவதற்குத் தொடங்குவார்கள்.
      இந்தச் 
சூழ்நிலையில், இந்தியாவில் காந்தி, மகாத் மாவானால் இதில் வியப்படைவதற்கு 
ஏதுமில்லை. வேறு எந்த நாகரிகமான நாட்டிலாவது இவைகள் கடைப்பிடிக்கப்பட்டால் 
மக்கள் அவரை ஏளனம் செய்து சிரிப்பார்கள். ஒரு சாதாரணப் பார்வையாளருக்குக் 
காந்தியின் போதனைகள் மிகவும் இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் 
தோன்றுகின்றன. உண் மையும் அகிம்சையும் உன்னதமான கோட்பாடுகள். 
சத்தியத்தையும் (உண்மை) அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை 
கொண்டாடப்படுகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பினார்கள். எனவே ஆயிரக்கணக் 
கில் அவர்கள் காந்தி சென்றவிடமெல்லாம் அவரைச் சூழ்ந்தார்கள். அவர்கள் ஏன் 
அவ்வாறு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
      ஆயிரக்கணக்கான
 ஆண்டுகளுக்கு முன்னால், மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை 
உலகுக்கு அளித்தார். இந்த விசயத்தில் காந்தி தான் இதனுடைய மூலகர்த்தா என்று
 ஓர் அறிவற்ற முட்டா ளையும் இயல்பாகவே அறிவிலியாகவும் உள்ளவரைத் தவிர, வேறு
 யாரும் அவருக்கு மதிப்புக் கொடுக்கமாட் டார்கள். ‘மெய்மை’, ‘அகிம்சை’ 
மீதான பரிசோதனை யிலிருந்து எழும் சிக்கலான பிரச்சினைகளின் மீது காந்தி 
கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந் தாரேயானால், அவருடைய மகாத்மா 
தன்மைக்கு அது ஒளியைக் கூட்டியிருக்கும். உலகம் என்றென்றும் அவருக்கு 
இதற்காக நன்றி செலுத்தியிருக்கும். இரண்டு புதிர்களுக்கு - அதாவது ‘உண்மை’ 
என்ற உன்னத மான கோட்பாட்டை எவ்வாறு கடைப்பிடிப்பது, எந்த சூழ்நிலைகளில் 
‘வன்முறை’ ஒரு சரியான செயலாகக் கருதப்படுவது என்பவற்றுக்கான தீர்வை உலகம் 
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ‘உண்மை’ மற்றும் 
‘அகிம்சை’யின் பாலான கண் ணோட்டம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று
 மகான் புத்தர் போதித்தார்.
      காந்தி 
இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறாரா? நான் எங்கும் இதைக் 
காணவில்லை. அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் ஆய்வு செய்தால், அவர்
 மற்றவர்களின் மூலதனத்தின் மீது விளையாடி வருகிறார் என்பதைக் காண்கிறோம். 
‘உண்மையும்’, ‘அகிம்சையும்’ அவருடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. 
காந்தியின் குணாம்சத்தை நான் ஆழந்து ஆராயும் போது, அவருடைய குணாம்சத்தில் 
ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் 
தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணருகிறேன்.
      தந்திரத்தினாலும்
 அவரிடம் உள்ளார்ந்துள்ள புத்திக்கூர்மையினாலும் எப்போதும் அவர் தன்னை 
முன்னணியில் இருக்கும்படிச் செய்து கொண்டுவிடு வார். தனது ஆற்றலிலும், 
குணாம்சத்திலும் நம்பிக்கை உடைய ஒருவர், வாழ்க்கையின் எதார்த்தங்களைத் 
துணிவுடனும் ஆண்மையுடனும் எதிர்கொள்வார். அவர் தனது இடுப்பில் ஒரு 
குத்தீட்டியைச் செருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நயவஞ்ச கமும் 
துரோகமும் பலவீனமானவர்களின் ஆயுதங் களாகும். காந்தி எப்போதும் இந்த 
ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.
      தன்னைக்
 கோகலேயின் ஓர் அடக்கமான சீடர் என்று பல ஆண்டுகளாக அவர் அறிவித்து வந்துள் 
ளார். அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவர் திலகரைப் பாராட்டி வந்துள்ளார். 
பின்னர் அவர் திலகரை வெறுத் தார். எல்லோரும் இதை அறிவார்கள். நிதி 
திரட்டுவதற்கு அவர் திலகரின் பெயரைப் பயன்படுத்தியிராவிட்டால் சுயராச்சிய 
நிதிக்கு ரூ.1 கோடியை அவரால் திரட்டி யிருக்க முடியாது என்பதை எல்லோரும் 
அறிவார்கள். தனிப்பட்ட முறையிலான தனது உறவை மறந்தும், பிற விசயங்களை 
ஒருபுறம் ஒதுக்கி வைத்தும், ஒரு புத்திக்கூர்மையுள்ள அரசியல்வாதி என்ற 
முறையில், அவர் அந்த நிதிக்குத் திலகரின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்.
      காந்தி
 கிறித்துவ மதத்தின் உறுதியான எதிராளி யாவார். மேலைய உலகத்தை 
மகிழ்விப்பதற்காக, நெருக்கடியான சமயங்களில் அவர் அடிக்கடி விவிலி 
யத்திலிருந்து மேற்கோள் காட்டுவார். அவருடைய மனதைப் புரிந்து கொள்வதற்காக, 
மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் மேற்கோள் காட்ட விரும்பு கின்றேன்.
      வட்டமேசை
 மாநாட்டின் போது, அவர் மக்களிடம், ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் 
பிரதிநிதிகள் முன்வைக் கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் ஆட்சேபனை 
எழுப்பமாட்டேன்’ என்று கூறினார். ஆனால் தாழ்த் தப்பட்ட வகுப்புகளின் 
பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தவுடனேயே காந்தி, தான் 
அளித்த உறுதிமொழிகளையெல்லாம் ஓசைபடாமல் விட்டுவிட்டார். இதைத் 
தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அவர் செய்த துரோகம் என்று நான் கருது 
கிறேன்.
      காந்தி முசுலீம்களிடம் சென்று,
 தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கை களை 
அவர்கள் எதிர்த்தால், முசுலீம்களின் 14 கோரிக் கைகளைத் தான் ஆதரிப்பதாகக் 
கூறினார். ஒரு கயவன்கூட இதைச் செய்திருக்கமாட்டான். இது காந்தியின் 
துரோகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே யாகும்.
இது
 பெருமளவு என்னை வேதனைப்படுத்தியது. ஒரு பழைய மூதுரையை இச்சமயத்தில் 
கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘கடவுளின் பெயரை உச் சரித்துக் கொண்டே 
கத்தியைக் கையில் மறைவாக வைத்துக் கொள்வது’ என்பதே அதுவாகும். இத்தகைய 
ஒருவரை மகாத்மதா என்று அழைக்க முடியுமானால், காந்தியை ஒரு மகாத்மா என்று 
தாராளமாக அழை யுங்கள். என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சாதாரண மோகன்தாஸ் 
கரம்சந்த் காந்திதானே தவிர, வேறொன்றுமில்லை.
      ‘சித்ரா’
 இதழின் ஆசிரியர் கேட்டதைக் காட்டிலும் அதிகமாக நான் கூறிவிட்டேன். 
‘சித்ரா’ இதழின் வாசகர்கள் செரித்துக் கொள்ளக் கூடியதைக் காட்டிலும் 
அதிகமாக நான் நிறைய கூறிவிட்டேன் என்று நினைக் கிறேன்.
(இந்தக்
 கட்டுரை மராத்தி இதழான ‘சித்ரா’வில் 1938இல் தீபாவளி சிறப்பு மலரில் 
வெளியிடப்பட்டது. ஆதாரம் : டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு (தமிழ்) : 
தொகுதி 36, பக்கங்கள் 88-95)
- எழுத்தாளர்: அம்பேத்கர்
 - தாய்ப் பிரிவு: திசைகாட்டிகள்
 - பிரிவு: அம்பேத்கர்
 
No comments:
Post a Comment