Jan 10, 2010

மாத்ரு பஞ்சகம்


ஆதி சங்கரர் அவர்களது அருமை அன்னைக்குப் பாடிய மாத்ரு பஞ்சகம.

இதில் பரமாசாரியார்கள் அருளிய தமிழாக்கம் அடங்கியுள்ளது

மாத்ரு பஞ்சகம்

சுலோகங்களின் தமிழாக்கமும் அவைகளுக்கு விளக்கங்களூம் அருளியது காஞ்சி மாமுனிவர் அருள்மிகு சந்திரசேகர ஸரஸ்வதி அவர்கள்.

ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸூதி ஸமயே துர்வார சூலவ்யதா|
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ|
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாSக்ஷம:|
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம:||

மஹத் புண்யத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். ''மாத்ரு தேவோ பவ'' மாதா என்ற தெய்வத்தை உபாசிக்கிறவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியான ஆதிசங்கரர் கூறிய மாத்ரு பஞ்சகம்.
தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் பொழுது அரும்பாடுபட்ட கஷ்டத்திற்கு நான் அதற்குப் பதில் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனோ? அது இருக்கட்டும்; பிரசவ சமயத்தில் போக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கின்றேனா? அதுவுமிருக்கட்டும்; என்னைப் பெற்றதும், என்னை ரக்ஷக்க ருசியில்லாத பொருளைச் சாப்பிட்டு ஜீவித்த எனது தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தனது சரீரத்தை இளைக்கச் செய்வதும், தூக்கsமில்லாமலும், எனது மலத்திலேயே படுத்து ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் காப்பாற்றிய குழந்தைகளில் எவனாவது தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன். ஏற்றுக்கொள்.

குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வமுச்சை:|
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ||

நான் வித்யாப்யாஸம் செய்யச் சென்றபொழுது அம்மா, நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறியது குருகுலவாசிகளும் கதறும் படிச் செய்த அம்மா, உனக்கு நமஸ்காரம்.

ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த விதினா|
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் ||

அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில், உனக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால் ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதால், மனம் தவிக்கின்ற உனது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகின்றேன்.

முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வாம் |
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் ||

அம்மா! என்னைக் காணும்போதெல்லாம், என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமென்று எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொல்லும் தாரையினால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன். இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா உன்னைச் சரணடைகிறேன்.

அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸுதி காலே யதவோச உச்சை |
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: ||

அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் அம்மா! அப்பா! சிவபெருமானே என்றும்; கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா என்று அழைத்த அந்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து, உன்னைச் சரணடைகின்றேன் என்று பெற்ற தாய்க்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.



Jan 5, 2010

தவளையும் பூமியும்


கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை போட்டோம் என்றால், உடனடியாக அது வெளியே தாவிக் குதித்து தப்பிவிடும். அதே தவளையை மெதுவாக சூடாகிக் கொண்டிருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டோம் என்றால்,அது பேசாமல் உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்து கொண்டே இருக்கும் - கடைசியில் அது இறக்கும் வரை.

புவி வெப்பமடைதலும் இதேபோன்று மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும்.

கடந்த பத்தாண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கு மாறாக புவி வெப்பமடைதலின் விளைவுகள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கணிக்கப்படும் அதன் பாதிப்புகள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. துருவப் பகுதிகளில் நொறுங்கி விழும் பனிப்பாறைகள், ஐரோப்பாவில் எதிர்பாராத வெப்பஅலைகள், ராஜஸ்தானில் பெருவெள்ளம், உலகெங்கும் பனிச்சிகரங்கள் சுருங்கி வருகின்றன - எல்லாம் புவி வெப்பமடைதலின் பின்விளைவுகளே.

கடந்த 50 ஆண்டுகளில் பனிச்சிகரங்கள் பெருமளவு சுருங்கிவிட்டன. இதே வேகத்தில் பனிச்சிகரங்கள் உருகி வந்தால், வடஇந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமளவு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவர்.

புவி வெப்பமடைதலின் எதிர்விளைவுகளை அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருவது ஒரு 'தர்மசங்கடமான உண்மை'. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தவுள்ள உடனடி ஆபத்துகளை உணராமல் இருந்து வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்கள் உள்ளன.

இந்த நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி: பூமியை அழிக்கும் சக்தி படைத்த புவி வெப்பமடையும் விளைவைத் தடுக்க பன்னாட்டு அரசுகள் ஏன் பெரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றன என்பதே.

இதை அறியாமை என்று சொல்ல முடியாது, அலட்சியம் என்றே சொல்ல வேண்டும். தங்களது நடவடிக்கையும், வாழ்க்கை முறையும்தான் புவி வெப்பமடைதற்கு காரணம் என்பதை மக்கள் (குறிப்பாக பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உணராமல் இருக்கிறார்கள். அளவை மீறி பெருகிவிட்ட கார்களில் பயன்படுத்தும் எரிபொருள், நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரம், விமானப் பயணம், காடுகளை அழிப்பது போன்றவைதான் கடற்கரைகளை மூழ்கடிக்கின்றன, சுட்டெரிக்கும் வெயிலை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை

நமது ஒரே வீடான இந்தப் பூவுலகு புவி வெப்பமடைதலில் சிக்கித் திணறி வருகிறது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்து பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அதற்குப் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் உருவாகி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


Jan 3, 2010

புத்தாண்டுக்கு வேண்டிய பத்து...



Ten Tips for the New Year - புத்தாண்டுக்கு வேண்டிய பத்து!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
புத்தாண்டிற்கு வேண்டிய பத்தைப் படத்துடன் பட்டியலிட்டுள்ளேன். பார்த்துப் பயன் பெறுங்கள்!
----------------------------------------------------------------------------


1. சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எப்போதும் தள்ளியே நில்லுங்கள்

2. உங்கள் லட்சியங்கள் எப்போதும் உயர்ந்ததாக இருக்கட்டும்

3. காரியத்திலேயே கண்ணாக இருங்கள்

4. உழைப்பதற்கு உடல் வலிமை தேவை. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்!

5. குழுவாக செயல்படுவதில் அதிக பலன் உண்டு. அதை உணர்ந்து செயல்படுங்கள்!

6. உங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு நம்பிக்கையான பங்குதாரரை வைத்துக்கொள்ளுங்கள்

7. மழை நாட்களுக்கென்று தனியாகச் சேமித்து வையுங்கள்

8.ஓய்வும் அவசியம். இடையிடையே ஓய்வெடுத்துப் பழகுங்கள்

9.சிரித்து மகிழ, நேரத்தை ஒதுக்குங்கள்!


10.சாத்தியமில்லாது எதுவுமில்லை!
அதை உணருங்கள். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி;-வாத்தியார்...

Dec 29, 2009

ஜேம்ஸ் கமரூனின் AVATAR

அம்பு வில்லுடன் இருக்கும் அப்பாவிகளை அடியோடு அழிக்கவந்த பூமியில் உள்ள கேவலமான மனிதரால்,மாற்றுக்கிரக மக்கள் படும் அவலம் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது.

டைட்டானிக் திரைப்படத்தின் பின்னர் ஜேம்ஸ் கமரூன் எடுத்த AVATAR திரைப்படம் இன்று உலகம் முழுவதையும் ஓர் உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் வக்கிர மனம் கொண்ட மனிதர்களால் தாக்கப்படும் மாற்றுக்கிரக அபலை மனித்கள் உயிரைக் காக்கப் படும்பாடு, முள்ளிவாய்க்காலில் நடந்த கொடிய தாக்குதலை கண் முன் கொண்டு வருகிறது. இதில் ஒரு மாற்றம் முள்ளிவாய்க்காலில் கெதியற்றவர்கள் அழிக்கப்பட்டார்கள், இங்கு காக்கப்படுகிறார்கள் இதுதான் வேறுபாடு. இப்படம் திரையுலக வரலாற்றில் 21 ம் நூற்றாண்டின் அவதாரம் என்று போற்றப்பட வேண்டிய மேன்மை கொண்டது. அனைவரும் திரையரங்கு சென்று முப்பரிமாணத்தில் அதைக் காண வேண்டும்.

முப்பரிமாணத்தில் முன்னரும் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழில் 25 வருடங்களுக்கு முன்னரே மைடியர் குட்டிச்சாத்தான் என்ற படம் வந்து சக்கை போட்டது. ஆனால் இப்போது ஜேம்ஸ் கமரூன் தந்துள்ள முப்பரிமாணப் படம் அடுத்த கட்ட சினிமாவிற்கான பொன்னான படிக்கட்டாக உள்ளது. படத்தைப் பார்க்கப் போவோர் முதலில் இரு பரிமாணம், முப்பரிமாணம் என்றால் என்ன என்ற தகவலை சரியாக புரிந்து கொண்டு திரைக்குள் போக வேண்டும்.

திரைப்படத்தின் கதை

வேற்றுக்கிரகத்தில் மனிதர்கள்போல அதேவேளை நீண்ட காதுகளும், வாலும் உள்ள, நீல நிறமான மக்கள் கூட்மொன்று இருக்கிறது. இவர்கள் இருக்கும் இடத்திற்கு அடியில் விலை மதிக்க முடியாத வளம் இருக்கிறது. இம்மனிதர்களோடு சேர்ந்து அவர்களாகவே மாறி, உண்மையை புரிய வைத்து அவர்களை அங்கிருந்து அகற்றி, அந்த வளத்தை எடுக்க முயல்கிறது நல்லவர்கள் கூட்டம். அவர்களை அடியோடு அடித்து விரட்டி, சூறையாட முயல்கிறது வில்லன் கூட்டம். இரண்டு போராட்டங்களுக்கு இடையில் ஒரு காதல். இறுதியில் மாற்றுக்கிரக மனிதரை காதலே காப்பாற்றுகிறது. அன்பே வெல்லும் என்ற உண்மையையும், பகுத்தறிவுள்ளவன் என்று தன்னைப் பெருமைப்படுத்தும் மனிதனே பிரபஞ்சத்தில் மோசமானவன் என்ற முத்தாய்ப்பையும் உரைக்கிறது கதை.

திரைப்படத்தின் மையக் கதைக்கான தலைமைக் கோட்பாடு

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடே திரைக்கதை அமைவிற்கு அடிப்படை. இந்தப் பிரபஞ்சத்தில் ஈதர் என்ற வெளி நிலையாக இருக்கிறது. மற்றவை எல்லாம் அசைகின்றன என்பது சேர். ஐசாக் நியூட்டனின் விதியாகும். ஆனால் இக் கொள்கை தவறானது, நிலையான பொருள் என்று எதுவும் கிடையாது, ஈதர் வெளி என்பதும் வெறும் கற்பனையே, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கின்றன. நாமும் நாம் வாழும் இயற்கையும் வேறு வேறல்ல என்பதே ஐன்ஸ்டைன் கூறியதாகும்.

இந்தத் திரைப்படத்தில் மாற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு பேசுகிறார்கள். மரங்கள், பூக்கள், பறவைகள் எல்லாமே ஒன்றின் செய்தியை ஒன்று அறிந்து சார்பியல் கொள்கையில் இயங்குகின்றன. ஆனால் மனிதனோ தனக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி, ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கவில்லை என்று தப்பாகக் கணக்கிட்டு கொலைகளிலும் அழிவிலும் குதிக்கிறான். கடைசியில் ஆயுதக் கலாச்சாரத்தாலும், பொருளாதார, அரசியல் அதிகார வெறியாலும் கவரப்பட்ட மனிதன் பிரபஞ்சத்திலேயே ஒரு நாசமான படைப்பு என்று சொல்லாமல் சொல்லும் விதமாக கதைக் கோட்பாடு பின்னப்பட்டுள்ளது. ஒன்றே உலகம் என்ற கணியனின் கோட்பாடே ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையின் எதிர் பார்ப்பாக உள்ளது.

திரைப்பட ஜாலங்கள்

இந்தத் திரைப்படத்தில் பிரமாண்டமே தொடக்கம் முதல் முடிவுவரை நம்மை அதிசயிக்க வைக்கிறது. போதுமா போதுமா என்று கேட்டு கேட்டு பிரமாண்டங்களை கொட்டித்தள்ளுகிறார். கிராபிக்ஸ், ஒலி என்பன படைத்துள்ள சாதனைகள் அற்புதத்திலும் அற்புதமாக உள்ளன.

கற்பகத்தின் பூங்கொம்போ ! காமன் தன் பெரு வாழ்வோ !
புயல் சுமந்து விற்குவளை மதிமலர் பூத்த விரைக்கொடியோ!
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
அற்புதமோ சிவனருனோ அறியேனென்று அதிசயித்தார் !

என்று பெரிய புராணத்தில் பரவையாரைப் பார்த்து அதிசயித்த சுந்தரரின் கற்பனை வடிவிலான கற்பக மரங்கள் இங்கு அதைவிட அழகாக காட்சிக்கு வருகின்றன. நீலகண்டனான சிவனை ஒரு சிந்தனையாக வைத்து நீல நிறமான மனிதர்களை கமரூன் வடிவமைத்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

மேலும் கதாநாயகனை ஊனமுற்ற ஒருவனாக் காட்டும்போதே டைரக்டர் ஊனமுற்றுள்ள மனித மனத்தை சித்தரித்துவிட்டார். கதாநாயகன் மாற்றுக் கிரகத்தில் உருமாறி, கால் பெற்று, காதலித்து, இயற்கையை அனுபவித்து, பறவைகளில் ஏறி பயணித்து, காதலித்து காணும் இன்பங்கள் கோடி கோடி.. எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடலின் யதார்த்தத்தை கண் முன் நிறுத்துகிறார். இந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் வரவுள்ள புதுமைகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னரே திரையில் பயணிக்கின்றன. தமிழில் உள்ள புராணங்களை விஞ்சிய அழகுகளை முப்பரிமாணம் படைத்துக் கொட்டுகிறது. காதலின் மகத்துவத்தை புரிந்தவன் கொலைஞனாகமாட்டான், அவன் இயற்கையையும் நாசம் செய்ய மாட்டான் என்ற செய்தி கதையில் உள்ளது.

ஜீவனுள்ள காதல்

உலகம் முழுவதிற்குமே பொதுவான உணர்வு காதல்தான். டைட்டானிக் என்ற கப்பலை படமாக்கிய கமரூன் அங்கும் ஒரு ஜீவனுள்ள காதலை ஓடவிட்டு கதைக்கு வலுவூட்டினார். இங்கும் காதலே ஜீவநாடியாக உள்ளது. காதலுக்காக கதாநாயகன் உலகத்தையே கைவிட்டு மாற்றுக்கிரக வாசியாகவே மாறுகிறான். காதல் எத்தனை வலிமையானது என்பதை இங்கு அவர் சொல்லியுள்ளார். அன்று உலகமே வேண்டாம் காதலே வேண்டும் என்று உயிர் கொடுத்ததோடு ரோமியோ – யூலியட் முடிந்தது. ஆனால் இன்றோ உலகமே வேண்டாம் என்று விலகி காதலுக்காக ஒரு புதிய அற்புத உலகமே போகும் காதலரை தருகிறார் கமரூன். இன்னொரு பிறவி இருந்தால் மறுபடி சந்திப்போம் என்று பிரியும் காதலருக்கு, இன்னொரு உலகமே இருக்கிறது என்ற உன்னதத்தைத் தருகிறார். பன்னிரண்டு வருடங்களாக இதற்காகவே அவர் போராடியுள்ளார். 12 வருடங்களில் 100 வது படம் தருவேன் என்று கூத்தாடும் நம்மூர் நாயகர்களுக்கு 12 வருடங்களில் ஒரு படம் என்ற கமரூனின் முயற்சி நல்லதோர் பாடமாக அமைந்தால், நமது சினிமாவும் உயர்வு பெறும்.

குறைபாடுகள்

எல்லாமே பிரமாண்டமாக இருந்தால் அந்தப் பிரமாண்டமே ஓரிடத்தில் தெவிட்டிவிடும் நிலை வரும். லோட் ஒப் த றிங்ஸ் போன்ற பிரமாண்டமான தயாரிப்புகளில் இருந்த தெவிட்டல் இதிலும் சிறியளவில் உண்டு. பிரமாண்டங்களில் பரவசமடையும் ஒருவர் கதையைக் கோட்டைவிடவும் வாய்ப்புண்டு. இதுவரை அவதார் பற்றி தவறான கணிப்புகள் தமிழகத்தில் நிறைய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படம், திரைக்கதை, தொழில் நுட்பம், சினிமா என்ற மகத்துவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற பாதையில் கொலிவூட்டுக்கு கமரூன் புத்துயிர் கொடுத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. அடுத்த ஆண்டு டைட்டானிக் போல 11 ஆஸ்கார் விருதுகளை தட்டும் இப்படம் என்பதில் அதிக சந்தேகம் தேவையில்லை. 2009 ல் அவட்டாரை மிஞ்ச ஒரு பிரமாண்டமான படம் வரவில்லை.

நன்றி;-கி.செ.துரை

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?


சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.

ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.

இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.