Apr 24, 2009

பிரவுசருக்குத் துணையாக....

பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்–ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு டிக்ஷனரியை இதன் மூலம் பயன்படுத்த முடியும். உங்களின் பிற இணையப் பக்கங்களில் உள்ள அக்கவுண்ட்களை அங்கு செல்லாமலே பெற்றுக் காண முடியும். இவற்றில் சிலவற்றைச் சோதனை செய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் சிலவற்றைப் பயனுள்ளதாகப் பார்த்தோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்புகளுக்கு www.ieaddons.com என ஒரு தனித் தளமே இயங்குகிறது. இனி இந்த வசதிகளையும் அவற்றைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு கிடைக்கும் தள முகவரிகளையும் காணலாம்.

1. தேவையான தகவல்கள், விளக்கங்கள் பெற: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கிடைக்கும் தளம் ஒன்றில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் www.answers.com தளத்தை அணுகி அந்த சொல் சார்ந்த விளக்கங்களையும் கூடுதல் தகவல்களையும் பெற்றுத் தரும். (www.snipurl.com/3so5s)



2. விளம்பரங்களைத் தடுக்க: திடீர் திடீரென எழும் விளம்பரங்கள் நம் இன்டர்நெட் பிரவுசிங் வேகத்தைக் கெடுக்கும். மிக அக்கறையுடன் ஒரு தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்; அப்போது திடீரென ஒரு பேனர் விளம்பரம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தகவல்களை மறைக்கும். இந்த குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற் றைத் தடுக்கும் பணியை மேற்கொள்கிறது. கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3so6d



3. இன்டர்நெட்டுக்கான காலர் ஐ.டி.: தொலைபேசிகளில் நம்மை யார் அழைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் வசதி காலர் ஐ.டி. வசதியாகும். இதே போல இன்டர்நெட் சைட்டுக்கு உண்டா? நாம் பார்க்கும் தளங்கள் என்ன என்று நமக்குத் தெரியாதா? என்கிறீர்களா? ஒரு சில தளங்கள் நம்மை அந்த தளத்தில் பதியச் சொல்லி நம் பெயர், பிறந்த நாள், முகவரி, பிடித்தது மற்றும் பிடிக்காதது போன்ற தகவல்களை எல்லாம் தரச் சொல்கின்றன. இவற்றைப் பெறும் இந்த தளங்களை இயக்குபவர்கள் யார்? அவர்களின் முகவரி என்ன? என்று நாம் அறிந்து கொள்ள ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 க்கான ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் பிஷிங் பில்டரும் உள்ளது. இது கிடைக்கும் முகவரி : www.snipurl.com/3so83



4. பல டவுண்லோட் பைல்கள்: ஒரே நேரத்தில் பல பைல்களை டவுண்லோட் செய்திடுகையில் இந்த ஆட் ஆன் புரோகிராம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உதவுகிறது. டவுண்லோட் ஆகும் பைல்களை தொகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கிறது. இதன் மூலம் பைல்கள் வேகமாக டவுண்லோட் செய்யப்படுகின்றன. மேலும் இதில் வெப் பேஜ் ஒன்றில் லிங்க் செய்யப்பட்டுள்ள அனைத்து பைல்களையும் டவுண்லோட் செய்திடும் வசதியும் கூடுதலாகக் கிடைக்கிறது. இதன் முகவரி : www.snipurl.com/3soal

5. எந்த வகையில் காப்பி: ஒரு பைலை இணையப் பக்கத்திலிருந்து சேவ் செய்கையில் அதனை எச்.டி.எம்.எல். ஆகக் காப்பி செய்திட வேண்டுமா அல்லது டெக்ஸ்ட்டாக காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷனைக் கொடுத்து காப்பி செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு வசதியைத் தருகிறது. குறிப்பாக சில தளங்களில் உள்ள எச்.டி.எம்.எல். பைலை அந்த பார்மட்டிங் சங்கதிகள் எல்லாம் இல்லாமல் டெக்ஸ்ட் பைலாக வேர்ட் டாகுமெண்ட்டில் பதிந்திட இது உதவுகிறது. இது கிடைக்கும் தள முகவரி : www.snipurl.com/3soby

6. பிரவுசரில் வாய்ஸ் கமாண்ட் : இணையத்தில் பல பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென முன் பார்த்த பக்கங்களுக்கோ அல்லது பின்னர் பார்த்த பக்கங்களுக்கோ செல்ல வேண்டியுள்ளது. மவுஸைப் பிடித்து கிளிக் செய்யாமல் கம்ப்யூட்டருடன் இணைந்த மைக் மூலம் Back, Forward, Refresh எனச் சொல்லி அதன் மூலம் நாம் விரும்பும் பக்கங்களுக்குச் சென்றால் எவ்வளவு எளிது. இந்த வாய்ஸ் மூவிங் வசதியை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் முகவரி: www.snipurl.com/3sodw

7. பிரவுசரிலேயே மியூசிக் பிளேயர்: ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற ஆடியோ மற்றும் வீடியோ இயக்கும் மீடியா பிளேயர்களை பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்தவாறே இயக்கினால் எவ்வளவு எளிது. தனியே வேறொரு விண்டோ சென்று இந்த பிளேயர்களை இயக்குவது சுற்று வழிதானே. இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஒரு ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இதன் முகவரி: www.snipurl.com/3soes

8. பார்மட் கன்வெர்டர்: இணையத்தில் பைல்கள் பலவிதமான பார்மட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றை நம் பெர்சனல் கம்ப்யூட்டர் அடையாளம் கண்டு இயக்கும் வகையில் பல வேளைகளில் மாற்ற வேண்டியுள்ளது. பல வீடியோ, படம் மற்றும் டாகுமெண்ட் பார்மட்டுகள் இதில் கிடைக்கின்றன. இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி : www.zamzar.com/tools

9.தேடுதல் தளங்கள் படங்களாக: கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்கள் வழி தேடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். உங்களுக்கான விடைகள் கொண்ட தளங்களின் முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். இவற்றிற்குப் பதிலாக அந்த தளங்களின் முகப்புகள் சிறிய தம்ப்நெயில் படங்களாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்த உதவியை ஒரு ஆட் ஆன் தொகுப்பு கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்களுக்கு மட்டும் தருகிறது. இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3soew



10. பார்த்தது பார்த்தபடி மூடித் திரும்பத் தர: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென பிரவுசரை மூட வேண்டியுள்ளது. இன்னும் சில தளங்களை முழுமையாகப் பார்க்கவில்லை. ஒவ்வொன் றாக மூடிவிட்டால் பின் மீண்டும் வெப் சைட்டின் அந்த பக்கம் எப்படிப் போவது? என்று கலங்குகிறீர்களா? ஒவ்வொன்றாக மூடுவதும் சிரமமாக உள்ளதா? இந்த ஆட் ஆன் தொகுப்பு இணைத்துக் கொண்டால் அனைத்து தளங்களையும் மூடும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் மீண்டும் பிரவுசர் திறக்கப்படுகையில் அதே பக்கத்தில் அனைத்து தளங்களையும் திறந்து தருகிறது. இந்த உதவிக்கான ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3sog0



ஆட் ஆன் தொகுப்புகளை எப்படி கையாள்வது?



1. பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளைவைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.

2. இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.

3. பயர்பாக்ஸ் பதிப்பு 3ல், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும்.அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது.


Apr 18, 2009

மனசுக்கு இதமாக கணக்கு பன்னுவோமே..

நண்பர்களே,
நன்றாக யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.சாதரணமாக நடைமுறைக்கு ஏற்றவாறு கணக்கிட்டாலே போதும்.


கேள்வி ஒன்று:
ஒரு ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். முதலிலிருந்து இரண்டாவதாக ஓடும் ஆளையும் முந்தி விட்டீர்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

.
..
...
....

பதில்:
இரண்டாவது ஆளையும் முந்தி விட்டால் முதலிடம்தானே. இது என்ன கேள்வி என்கிறீர்களா?
தவறு.
இரண்டாவது ஆளை முந்தி நீங்கள் அவரிடத்தில்தானே வருவீர்கள்.
அதாவது... இரண்டாவது இடத்தில். சரிதானே!.


கேள்வி இரண்டு:
முதல் கேள்விக்கு எடுத்தது போல, நிறைய நேரம் எடுத்து யோசிக்காமல், வேகமாக பதில் சொல்லுங்கள். சரியா?

ஒரு ஓட்டப் பந்தயத்தில் கடைசி ஆளை நீங்கள் முந்தி விட்டீர்கள் என்றால் அப்போது உங்களின் இடம் எது?

.
..
...
....

பதில்:
இதில் தப்பாக சொல்ல வழியே இல்லை. கடைசிக்கும் முதல் ஆள். இதுதானே உங்கள் பதில்.
தவறு.
கடைசி ஆளை எப்படிங்க முந்த முடியும்.நீங்களே கடைசி ஆளாய் இருந்தாலும் கூட, கடைசிக்கும் முதல் ஆளைத்தானே முந்த முடியும்.

சே! என்று தானே சொன்னீங்க. பின்னால் உள்ள இரண்டிலும் வெற்றிதான். வாங்க!.

கேள்வி மூன்று:
சாதாரண கூட்டல் கணக்குதான். சின்ன தந்திரம் இருக்கிறது. மனதில்தான் போடணும். கால்குலேட்டர் எடுக்கக் கூடாது. சரியா?

ஒரு 1000 எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு 40 சேருங்கள். இதில் மேலும் ஒரு 1000 சேருங்கள். இப்போது அதில் ஒரு 30 சேருங்கள். அதில் இன்னொரு 1000 சேருங்கள். இதில் ஒரு 20ஐ சேருங்கள். மீண்டும் ஒரு 1000 சேருங்கள். அதில் ஒரு 10ஐ சேருங்கள். மொத்தம் எவ்வளவு?

.
..
...
....

பதில்:
5000 வந்திருக்கிறதா?
சரியான பதில் நான்காயிரத்து நூறுதான்.
நம்பவில்லையா?
இப்போது கால்குலேட்டர் கொண்டு கூட்டிப் பாருங்கள்.

போகட்டும் விடுங்கள். அடுத்த கேள்விக்கு சரியான விடை சொல்லி விடுவீர்கள். போவோமா?

கேள்வி நான்கு:
Maryயுடைய தந்தைக்கு ஐந்து பெண் குழந்தைகள்.
அவர்களுடைய பெயர்கள் முறையே
1. Nana 2.NiNi 3.Nunu 4.Nene எனில்
ஐந்தாவது குழந்தையின் பெயரென்ன?

.
..
...
....


பதில்:
NaiNai என்று சொன்னால் சரியானதுதான் என்று சொல்ல மாட்டேன்.
தவறு. அவளுடைய பெயர் Mary.
சந்தேகம் வந்தால் கேள்வியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

சரி விடுங்க.
கடைசியாக போனஸ் கேள்வி. சொல்லிடுவீங்க

போனஸ் கேள்வி:
ஒரு வாய் பேச இயலாதவர் tooth brush வாங்க ஒரு கடைக்குச் சென்றார். கடைக்காரரிடம், ஒருவன் பல் விளக்குவது போல செய்கை காண்பித்து, அதைக் கடைக்காரருக்கு புரிய வைத்து, வெற்றிகரமாக வாங்கி விட்டார். இப்போது ஒரு பார்வையற்றவர் sunglasses வாங்க அதே கடைக்கு வந்திருப்பதாகக் கொள்வோம். அவர் எப்படி கடைக்காரருக்கு விளங்க வைப்பார்?

.
..
...
....


பதில்:
இதென்ன பெரிய அதிசயமா? அவர் வாயால் கேட்டு வாங்கி வருவார். அவர் பார்வையற்றவர்தான் பேசத் தெரியாதவர் அல்லவே.

நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதரணமான கணக்குத்தான் இவை.

Apr 13, 2009

இமெயில் சில எண்ணங்கள்


இமெயில் எனப்படும் மின்னஞ்சல் வசதியினைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இல்ல முகவரிகளைக் காட்டில்ம் இமெயில் முகவரிகள் தான் ஒருவருக்கு மிக முக்கியமானவையாக மாறியுள்ள காலம் இது.

இந்தக் காரணங்களினாலேயே ஒருவரின் பெர்சனாலிட்டியை அவர் அனுப்பும் மெயில்கள் தீர்மானிக்கின்றன. எனவே நாம் கையாளும் மெயில்களில் சில வரையறைகளையும் ஒழுங்கு முறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.


ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.


பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


* முதலில் இமெயில் கடிதங்களைப் பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரத்தில் அனுப்பினேன். அதனால் அவ்வாறு எழுதினேன் என்ற நொண்டிச் சாக்குகளுக்கெல்லாம் இங்கே இடம் இல்லை. எனவே அனுப்புமும் கவனமாக அதனைக் கவனித்த பின்னரே அனுப்ப வேண்டும்.


* பொதுவாக இமெயில்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. அதுவும் நீங்கள் ஆன் லைனில் இருந்து மெயில்களைத் தயாரிக்கும்பொழுது இண்டர்நெட் நேரத்தை குறைப்பதில்தான் உங்கள் கவனம் செல்லும். அது நியாயமானதே. பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தால் நேரமாகும். எனவே பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை என துரிதமாக மெயில்களை அனுப்ப வேண்டும். ஆனால் தெரிந்தவர்களுக்கு மெயில்களை அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. முன்பின் தெரியாதவர்களுக்கு மெயில்களை அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள். இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.


*மெயிலைத் தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது. புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர் மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது. எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும்.


* யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள். குறிப்பாக நியூஸ்குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள். மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

* கடிதம் பெறுபவரைத்தான் நாம் பார்க்கப் போவதில்லையே என்ற எண்ணத்தில் அநாகரிகமாக மெயிலின் உள்ளே எதையும் குறிப்பிடாதீர்கள். கடிதம் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறதோ அவர் உங்கள் முன்பு தோன்றினால் அவரிடம் எவ்வளவு கண்ணியமாகப் பேசுவீர்களோ அதே கண்ணியத்தை அவருக்கு அனுப்புகிற மெயிலிலும் காட்டுங்கள்.


* கோபத்தில் இமெயிலைத் தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள். ஓரிரு நாட்கள் ஆறப்போட்டு, பின்பு மெயிலைப் படித்துப் பாருங்கள். புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு மெயிலை அனுப்புங்கள்.


* நேரில் ஒருவரிடம் பேசும்பொழுது உங்கள் முக பாவனை பேச்சின் ஏற்ற இறக்கம், அங்க சேஷ்டைகள் வைத்து நீங்கள் கோபத்திலா அல்லது கேலியாகவா அல்லது மகிழ்ச்சியுடனா பேசுகிறீர்கள் என்பதை எடை போட முடியும். ஆனால் இமெயில் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற மெயிலை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை இமெயிலில் சேர்க்க வேண்டும்.

* உரியவருக்குதான் இமெயிலை அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் இமெயிலைத் தயாரித்து ஏதோ நினைவில் தொடர் பில்லாத ஒருவருக்கு இமெயிலை அனுப்புவது மிகவும் தவறாகும். ரகசிய மெயில்கள், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மெயில்கள் போன்றவற்றை அனுப்பும் போது மெயிலின் பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.


* ஒரே மெயிலை உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு, உங்களுடைய மற்றொரு நண்பர், நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே அவர் மற்றவருடைய இமெயில் முகவரியை தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நீங்கள் BCC பீல்டைப் பயன்படுத்தி அதில் எல்லாருடைய முகவரிகளையும் தெரிவிக்க வேண்டும். வேண்டுமானால் உங்களுடைய முகவரியை To பீல்டில் நிரப்புங்கள்.

தினமலர் பத்திரிக்கையில் படித்தது.மிக அவசியமான கட்டுரை.அனைவருக்கும் பயன்படும்வகையில் எழுதப்பட்டுள்ளது.படியுங்கள் பயன்பெறுங்கள்.

Apr 11, 2009

அகிலத்தின் (Cosmos) இறுதி முடிவு என்னவாக இருக்கும் ?

கீழே உள்ள ஆராய்ச்சி கட்டுரை திரு.ஜெயபாரதன் அவர்களால் எழுதப்பட்டது. கட்டுரையில் உள்ள விஷயங்கள் மனத்தினால் எண்ணக்கூட முடியவில்லை.
எதை வேணாலும் நம்மால் கற்பனை செய்யமுடியும்.ஆனால் இவ்விசயம் கர்ப்பனைக்கும் அப்பால் உள்ளது.
படிக்க படிக்க பிரம்மிக்க வைக்கும் கட்டுரை இது.
படியுங்கள் அனுபவியுங்கள்.


பெரு வெடிப்புப் பிரபஞ்சத்தின்

அறியா முடிவைப்

பொறிக்கப் போவது

துரிதப்படுத்தும் கருமைச் சக்தி !

உதைத்துத் தள்ளும்

அகிலத்தை

ஒடுக்குமா அல்லது மேலும்

முடுக்குமா ?

ஒளிமந்தைகளை

கவர்ச்சி விசைக்கு எதிராய்

இழுத்துச் செல்கிறது

விலக்கு விசை

காலவெளிக் கருங்கடலில் !

கடவுளின் குதிரைச் சக்தி

கருமைச் சக்தி !

காலக் குதிரை

பின்னோக்கிச் செல்லாது !

பிரபஞ்சத்தின் முடிவு

வெப்ப மரணம் ! அல்லது

பெருங் குளிர்ச்சி !

பெருங் சுருக்கம் ! அல்லது

பெரும் முறிவு !

ஒழுங்கீனச் செறிவு !

Fig. 1

The End of the Universe

"எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் முடிவடையும் என்பதை ஆராய்ந்தறிய விஞ்ஞானிகள் எவற்றால் பிரபஞ்சம் உருவாக்கப் பட்டது என்று முதலில் அறிய வேண்டும்."

ஜேம்ஸ் டிரி·பில் பேராசிரியர் (James Trefil) (George Mason University)

"வெப்ப இயக்கவியல் பௌதிகத்தின் இரண்டாம் விதி (The Second Law of Thermodynamics) பிரபஞ்சத்துக்கு "வெப்ப மரணம்" அல்லது "ஒழுங்கீனச் செறிவு" (Heat Death or Entropy Death) என்னும் முடிவைத் தவிர வேறெதுவும் இல்லை என்று முன்னறிவிக்கிறது. அந்த நிலையில் உயிரனங்கள் எதுவும் பிழைத்திருக்க முடியாதபடி உஷ்ணம் மிகக் கீழாகத் தணிந்து விடும்."

ஸர் ஜீன்ஸ் ஜேம்ஸ் ஆங்கிலப் பௌதிக, வானியல் விஞ்ஞானி (1877-1946)

நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச "வெப்ப இழப்பு" (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது. அதாவது சிறுகச் சிறுக விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் முடிவிலே அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும். விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒரு காலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)

Fig. 1A

The Big Bang Beginning

1998 ஆண்டுக்கு முன்னால் "கருமைச் சக்தி" என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை ! கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியை உந்த வைக்கிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.

கிரிஸ்டொ·பர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)

பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

அமெரிக்க வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

Fig. 1B

The Evolution of the Cosmos

பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் என்னதாய் இருக்கும் ?

பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முதலில் பிரபஞ்ச வடிவங்கள் எப்படித் தோன்றின என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் ! பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு விண்வெளி எப்படி இருந்தது என்றும் முன்பாக ஊகிக்க வேண்டும் ! பிறகு பிரபஞ்சம் சிதைந்தோ விரிந்தோ முறிந்தோ வெப்பம் குன்றியோ குளிர்ந்தோ அல்லது ஒடுங்கியோ போனால் என்ன நேரிடும் என்று ஊகிக்க வேண்டும் ! அதாவது பிரபஞ்சத்தின் பிறப்பு இறப்பு வளர்ப்பு போன்ற மூலாதார விளக்கங்களில் அநேகக் கருத்துக்கள் ஊகிப்பாக இருப்பனவே தவிர மெய்யான விஞ்ஞானமாக இன்னும் உருவாக வில்லை ! கடந்த நூறாண்டுகளாகத் தொலைநோக்கிகள், கதிரலை ரேடார்கள், விண்வெளிப் பயணங்கள், விண்ணுளவிகள் மூலமாகப் பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வைத்துக் கொண்டு காலத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும் கோட்பாடுகள் ஊகிக்கப்பட்டும் மாறி மாறியும் வருகின்றன ! இந்த முறைகளைத் தவிர வேறு ஆய்வுப் பாதைகள் இல்லாததால் இவற்றைப் பின்பற்றி பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் வெவ்வேறு காட்சிகளை ஊகிக்கிறார்கள் !

Fig. 1C

The Fate of the Universe

தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தாலும் எப்போது பிரபஞ்சத்தின் மரணம் இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்க முடியவில்லை ! பிரபஞ்சத்தின் ஆயுள் அடிக்கோல் டிரில்லியன் (Trillions of Years 10^12) ஆண்டுக் கணக்கில் உள்ளது என்பது மட்டும் அறியப் பட்டுள்ளதால் யாரும் அஞ்ச வேண்டியதில்லை ! பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி ஓரளவு அறிந்த விஞ்ஞானிகளின் ஆர்வம் அதன் இறப்பைப் பற்றி உளவிட இப்போது திரும்பியுள்ளது. பிரபஞ்சத்தின் பிறப்பும் இறப்பும் பரிதியால் பூமியில் நிகழும் இரவு பகல் போல் மாறி மாறி வரும் ஒரு "சுற்றியக்கம்" (Cyclic Event) என்பது பல விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது ! விஞ்ஞானி ஜியார்ஜ் காமா ஊகித்த பிரபஞ்சப் "பெரு வெடிப்புக் கோட்பாட்டைப்" (The Big Bang Theory) பெரும்பான்மையான உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரு வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் கரும்பிண்டங்களைக் கொண்டு விண்மீன் ஒளிமந்தைகளை உருவாக்கி அதன் வடிவம் விரிவாகி வருகிறது. புதிதாக மறைமுகமாய்க் கண்டுபிடிக்கப் பட்ட "கருஞ்சக்தி" (Dark Energy) அண்டங்களின் கவர்ச்சி விசையான "ஈர்ப்புச் சக்திக்கு" எதிரான விலக்கு விசை என்பது அறியப்பட்டது ! அந்தக் கருஞ்சக்தியே காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாய் "விரைவாக்கம்" (Acceleration) செய்து வருகிறது என்பதும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

Fig. 1D

The Time Machine

பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் எப்படி யெல்லாம் இருக்கலாம் ? பிரபஞ்சத்தில் பரிதி போன்ற விண்மீன்களின் எரிசக்தி முற்றிலும் தீர்ந்து போய் "வெப்ப மரணம்" (Heat Death) ஏற்படலாம் ! விண்மீன்களின் கண்ணொளி மங்கிப்போய் செத்த மீன்களும், பிண்டச் சடலங்களும் கருந்துளைகளால் (Black Holes) உறிஞ்சி விழுங்கப் படலாம் ! செங்குள்ளி விண்மீன்கள் (Red Dwarf Stars) எரிந்து மெதுவாக மங்கிப் போகலாம் ! கருஞ்சக்தி துரிதமாய் உந்தித் தள்ளும் காலாக்ஸிகள் பயணம் செய்து கருஞ் சூனியக் கடலில் (Sea of Black Void) கரைந்து போகலாம் ! கருந்துளைகளின் வயிறு பெருத்து எரிசக்தி தீர்வதால் வெடித்துப் பிண்டங்கள் வெளியாக்கலாம் ! இறுதியில் "வெப்பத் தளர்ச்சியால்" (ஒழுங்கீனச் செறிவால்) (Entropy) பிண்டமும் சக்தியும் பிரளயத்தில் சிக்கிக் கொள்ளலாம் ! பிரபஞ்சம் வெப்ப முறிவில் "பெருங் குளிர்ச்சி" (Big Chill) உண்டாகி முடிவடையலாம் ! அல்லது விரிந்தவை அனைத்தும் "பெருங் சுருக்கத்தில்" (Big Crunch) மீண்டும் ஒடுங்கிக் கொள்ளலாம் ! அல்லது "பெரு முறிவில்" (Big Rip) நொறுங்கிப் போகலாம் !

Fig. 1E

The Three Possible Scenarios

Of the Universe

அகிலப் போக்கின் மூன்று வித முக்கிய முடிவுகள் !

பிரபஞ்சத்தின் இறுதி முடிவு பல்வேறு நிபந்தனைகளைச் சார்ந்துள்ளது. பொதுவாக காலாக்ஸிகளைத் துரிதமாய் உந்தி விலக்கி வைக்கும் கருஞ்சக்தி என்பது என்ன, மற்றும் அதன் கோர விளைவுகள் என்ன என்னும் வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகளைப் பொருத்தது. இங்கே நான்கு வித முடிவுகளை அதாவது இருவிதப் பெருங் குளிர்ச்சி, பெரு முறிவு அல்லது பெருஞ் சுருக்கம் (Big Chill -1 & Big Chill -2, Big Rip & Big Chrunch) பற்றி ஆராயப் போகிறோம். அவற்றில் பெருமளவு உறுதியான முடிவுகள் இரண்டு : பெருங் குளிர்ச்சி அல்லது பெரும் முறிவு ! நான்கு எதிர்பார்ப்பு முடிவுகளை உளவும் போது ஆரம்ப கால நிகழ்ச்சி "பெரு வெடிப்பாகவே" (The Big Bang Event) எடுத்துக் கொள்ளப்படுகிறது. அடுத்து கருஞ்சக்தி (Dark Energy) உதித்த போது எழும் கேள்வி இதுதான் : கருஞ்சக்தியின் திணிவு (Density of Dark Energy) மெதுவாக மிகையானதா அல்லது துரிதமாக மிகையானதா ? கருஞ்சக்தியின் திணிவு மெதுவாக மிகையானல் விளைவு : பெருங் குளிர்ச்சி -2 (Big Chill -2) ! கருஞ்சக்தியின் திணிவு விரைவாக மிகையானல் விளைவு : பெரு முறிவு (Big Rip) !

Fig. 1F

Three Shapes of the Universe

பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்று முதலில் ஆராயலாம். மூன்று வித வடிவங்களை அனுமானித்துக் கொள்ளலாம். முதல் வடிவம் தட்டை வடிவம் (Flat Universe). இரண்டாவது பேரளவில் உப்பிய ஆனால் எல்லைக் குட்பட்ட மூடிய வடிவம் (Expanding but Closed Universe), மூன்றாவது விரியும் திறந்த வடிவம் (Expanding But Open Universe) ! தட்டை வடிவத்தில் பிரபஞ்சத்தின் விரிவு வீதம் (Expansion Rate) மெதுவாகிக் கொண்டே போகும். முடிவில் சமநிலை அடைந்து விரிவு நிகழ்ச்சி முற்றிலும் நின்று போகும். காலாக்ஸிகள் தனிப்பட்ட பிண்டத் தீவுகளாய் சூனியக் கருங்கடலில் பெருங் குளிர்ச்சி (Big Chill-1) நிலையில் முடங்கிக் கிடக்கும் ! அடுத்து கருஞ்சக்தி பிரபஞ்ச விரிவை துரிதமாக்கிப் பிளக்காத முறையில் நின்று விட்டால், பிண்டம் விரிவைச் சமநிலைப் படுத்திப் பெருங் குளிர்ச்சி (Big Chill-2) நேர்ந்து விடும். பொதுவாகத் தட்டைப் பிரபஞ்சத்தில் இந்த முறை விரிவாக்கம் செய்திடப் பெருங் குளிர்ச்சியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

Fig. 1G

The Role of Dark Energy

In the Universe

மூடிய பிரபஞ்சத்தில் நிகழப் போவது வேறான முடிவு. பிரபஞ்சத்தில் வெறும் பிண்டம் மட்டுமே இருக்குமானால் அல்லது கருஞ்சக்தியே இல்லாமல் போனால் ஈர்ப்புச் சக்தியின் வலு ஓங்கி பிரபஞ்சத்தின் விண்மீன்கள், அண்ட கோளங்கள் மீண்டும் ஓடுங்கிப் பெரு வெடிப்பு நிகழ்ச்சியின் எதிர்முறைக் குவிப்பு இயக்கமாகி "ஒற்றை வெப்பத் திணிவாய்" மாறிவிடும் (Collapsing into Hot Dense Singularity). இதுவே "பெருஞ் சுருக்கம்" (Big Crunch) என்று குறிப்பிடப்படுகிறது ! மூன்றாவது கருஞ்சக்தி காலாக்ஸிகளை மிகத் துரிதமாக விரைவாக்கினால் பிரபஞ்சத்தைச் சுக்கலாகப் பிளந்து முறித்துவிடும் ! அகிலத்தின் பேருருவம் படைத்த அசுரக் கொத்துகள், கொத்துகள் (Super Clusters & Clusters) யாவும் கிழிந்து போய்விடும். அதுபோல் பிறகு காலாக்ஸிகள், அண்டக் கோள்கள், இறுதியில் அணுக்கள் கூடச் சிதைந்து விடும். இந்த முடிவு கருஞ்சக்தியால் விளையும் "பெரு முறிவு" (Big Rip) என்று குறிப்பிடப் படுகிறது !

Fig. 2

Our Recycled Universe

உப்பி விரியும் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியின் விளைவுகள் !

பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகிய புதிர்கள் இருப்பது கண்ணுக்கு நேராகத் தெரியாத போதும் கருவிகளின் மறைமுக உளவுகள் மூலமே அறியப் பட்டுள்ளன ! விலக்கு விசையான கருஞ்சக்தி காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாக விரைவாக்கிப் பிரிப்பது ஒருவகையில் நல்லதா அல்லது பெருவாரியாகக் கேடு விளைவிப்பதா என்பது தெரியவில்லை ! வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்திருந்தால் காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த முறையில் காலாக்ஸிகளை மோத விடாமல் விலக்கு விசை ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பிரிக்கிறது.

கருஞ்சக்தி, கரும்பிண்டம் ஆகிய இரண்டில் கருஞ்சக்தியே மிக்கப் புதிராக நிலவி வருகிறது. காலாக்ஸிகளை விரைவாக்கும் கருஞ்சக்தியின் தெரியாத உட்பொருள்கள் (Components of Dark Enery) பிரபஞ்சத்தின் தலைவிதியை முடிவு செய்யும் ! மேலும் பிண்ட-சக்தி சமன்பாடு கூறுவது போல் பிரபஞ்சத்தில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் சமநிலையில் நிலவவில்லை ! பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியே 74% ஆகவும் கரும்பிண்டம் 22% ஆகவும் அமைந்திருப்பது இன்னும் புதிராக உள்ளது !

Fig. 3

Model of inflated Universe

பிரபஞ்சத்தில் இயற்கையாகக் கருஞ்சக்தி கரும்பிண்டத்தை விட சுமார் மூன்று மடங்கிருப்பது காரணத்தோடுதான் ! அப்போதுதான் சுழலும் காலாக்ஸி ஒளிமந்தைகளுக்கு அகிலத்தில் நகர்ந்து பயணம் செய்ய விலக்கு விசை கிடைக்கிறது ! வெறும் ஈர்ப்புச் சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் நகர்ச்சி இல்லாது முடக்கமே நிலவி இருக்கும்.

தான் கருதிய "நிலைத்துவப் பிரபஞ்ச மாதிரியில்" (Static Universe Model) கருஞ்சக்திக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதலில் "அகில நிலையிலக்கம்" (Cosmological Constant) என்று பெயர் வைத்தார். பிறகு தான் செய்தது பிழையானது என்று அவரே அதை நீக்கினார். ஆனால் பின்னாளில் அதுவே சூனியச் சக்தி (Vacuum Energy) அல்லது கருஞ்சக்தி (Dark Energy) என்று பெயர்களில் குறிப்பிடப்பட்டது. அகில நிலையிலக்கத்தை ஐன்ஸ்டைன் பிண்டத்தின் ஈர்ப்பு விசைக்கு எதிரான "விலக்கு ஈர்ப்பு விசை" (Repulsive Gravitational Force) ஆகப் பயன்படுத்தினார். விண்வெளி மெய்யாகச் சூனியமில்லை என்பதே அது குறிப்பிடுகிறது.

Fig. 4

High Entropy & Low Entropy

Universe

அகிலத்தில் சூனிய சக்தி எனப்படும் கருஞ்சக்தி சமநிலையில் பின்புலமாய் நிரம்பி யுள்ளது. அந்த சக்தியில் துகள் எதிர்த்துகள் என்னும் இரட்டைத் துணைகள் எழுந்தும் எழாமலும் வசிக்கின்றன. பிரபஞ்சம் உப்பி விரியும் போது கருஞ்சக்தியின் திணிவு மாறாமல் நிலையாக (Dark Energy Stays Constant, as Universe Expands) இருக்கிறது ! இந்த நியதிப்படி பிரபஞ்சத்தில் எத்துணை பரிமாண அளவுக் கருஞ்சக்தி இருக்க வேண்டும் என்று கணிக்கும் போது பிரச்சனை எழுகிறது. அப்படிக் கணித்திடும் போது அதன் மதிப்பீடு நோக்கிய அளவை விட 10^120 மடங்கு இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

பிரபஞ்சத்தின் இறுதி முடிவு நெருங்கி விட்டதா ?

அகிலத்தின் முடிவுக்குக் காலம் எப்போது வருமென்று யாரும் இதுவரை அனுமானிக்க வில்லை ! தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தாலும் எப்போது பிரபஞ்சத்தின் மரணம் இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்கக் கூட முடியவில்லை ! பிரபஞ்சம் உப்பி விரிவதில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் வெவ்வேறு கடமைகளைச் செய்து வருகின்றன.

Fig. 5

The Multiverse Stage

கரும்பிண்டம் பெரும்பான்மைக் கவர்ச்சி விசையாகப் பயன்பட்டு பிரபஞ்ச விரிவிக்கு ஓர் உன்னதத் "தடைக் கருவியாக" (Brake) நிலவி வருகிறது ! அதே சமயத்தில் கருஞ்சக்தியானது பிரபஞ்ச காலாக்ஸி ஒளிமந்தைகளை நகர்த்திச் செல்லும் உந்து விசையாக (Gas Pedal or Accelerator) இயங்கி வருகிறது !

பிரபஞ்ச வாகனத்தை இயக்க உந்து விசையும் தேவை ! தடை விசையும் தேவை ! பிரபஞ்சம் பிள்ளைப் பிராயத்தில் இருந்த போது விண்வெளி சிறிதாக இருந்தது ! அப்போது கவர்ச்சி விசையின் கைப்பலம் ஓங்கியது ! அனைத்துக் காலாக்ஸிகளும் நெருங்கி இருந்தன ! விண்வெளியின் விரிவு மெதுவாக நிகழ்ந்தது. பிரபஞ்சத்தின் வயது 5 பில்லியன் ஆண்டுகளாய் இருந்த போது சாதாப் பிண்டமும் கரும்பிண்டமும் மெலிவாகிக் கருஞ்சக்தியின் வலு ஓங்கியது. அதிலிருந்து ஆரம்பித்த பிரபஞ்சத்தின் உப்பிய விரிவாக்கம் துரிதமாகி ஒளிமந்தைகள் விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இயற்கை ஏன் பிரபஞ்சத்தின் விரைவாக்கப் பெடலை (Accelerator Pedal) வேகமாய் அழுத்துகிறது என்பதற்குக் காரணம் தெரியவில்லை ! பிரபஞ்சம் பெருங்குளிர்ச்சியில் மடியுமா அல்லது பெரும் முறிவில் முடியுமா என்பதும் யாருக்கும் தெரியவில்லை ! பிரபஞ்சத்துக்கு மரணம் எப்படி இருந்தாலும் அது நேர டிரில்லியன் (10^12) கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கும் போது பொதுநபர் ஏன் அதை நினைத்து மனமுடைந்து போக வேண்டும் ?

Fig. 6

The Big Bounce Theory

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

2. 50 Greatest Mysteries of the Universe - What is the Fate of the Universe ? (Aug 21, 2007)

3. Astronomy Facts File Dictionary (1986)

4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]

6. Cosmos By Carl Sagan (1980)

7. Dictionary of Science - Webster's New world [1998]

8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)

10 Hyperspace By : Michio kaku (1994)

11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)

12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

13 National Geographic - Frontiers of Scince - The Family of the Sun (1982)

14 National Geographic - Living with a Stormy Star - The Sun (July 2004)

15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

17 The Geographical Atlas of the World, University of London (1993).

18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806191&format=html (About The Universe -1)

21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40901081&format=htmlhttp://www.thinnai.com/?module=displaystory&story_id=40901081&format=html (About The Universe -2)

22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40901221&format=html (About The Universe -3)

22(அ) http://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/ (பெருவெடிப்புக்கு முன் நேர்ந்தது என்ன ?)

23 Sky & Telescope Magazine -Going Over the Dark Side - What is Inflating our Universe ? By : Richard Panek (Feb 2009)

24 Astronomy Magazine - Where the Universe is Heading ? By : James Trefil (July 2006)

25 How the Univers will End ? WikiAnswers.com (2009)

26 Return to the Static Universe By : Role MacRiner (Nov 2007)

27 Astronomy Today - The End of the Universe : Big Crunch Or Big Bamg By : Marc Delehanty [2008]

28 What is the End of the Universe ? By : Jagadheep Pandian (Nov 2001)

29. How the Universe Will End By : Michael Lemonick & Roger Ressmeyer/Corbis

30 How Will the Universe End ? By : Jim Holt (March 5, 2004)

31 Hawking Rewrites History Backwards By : Philip Ball (June 21, 2006)

32. The End of Cosmology (An Accelerating Universe Wipes Out Traces of its Origins) By : Lawrence Krauss & Robert Scherrer [February 25, 2008]

33 The End of Cosmology Posted By : Steve Kanaras [April 30, 2008]


******************

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

(jayabarat@tnt21.com) (February 26, 2009)

Apr 9, 2009

முழு விழிப்புணர்வு ...

நம் கண்ணில் ஒரு தூசு விழுந்தால், இமை தானே மூடிக்கொள்ளும். கையில் சூடு பட்டுவிட்டால் சடாரென வாய்க்குள் நுழைத்துக்கொண்டு சூடாற்றிக் கொள்கிறோம். இது போன்ற உடல் சார்ந்த விஷயங்கள் தானே அனிச்சையாய் நடைபெறும்.

அதுபோல தானே அனிச்சையாய் நடக்கக்கூடிய விஷயங்கள் பல உண்டு.

சைக்கிள் சாவியை தினமும் வைக்கவேண்டிய இடத்தில் சரியாய் வைப்போம். புதுப்பேனா வாங்கினால் நம் பெயரை எழுதிப்பார்ப்போம். வேறு எதையும் பெரும்பாலும் எழுதுவதில்லை. சன் மியுசிக் சேனல் வைக்கத் தானே கை ரிமோட்டில் ஒரு நம்பரின் மேல் வைக்கும்.

தினமும், ஒரே பாதையில் எட்டு வருடமாகக் காலை எட்டு மணிக்குப் போய்க்கொண்டிருந்தால், செல்லும் பாதையின்மீது நம் கவனம் இருக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக எல்லோருக்குமே எங்கேயாவது சென்று கொண்டிருக்கும்போது முந்தினநாள் விஷயங்களையோ, அல்லது இன்று அலுவலகத்தில் செய்யப்போகின்றவையோ, ஏதோ ஒன்றை மனம் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக சாலையில் யாரிடமும் மோதிக்கொள்ளாமல், திரும்ப வேண்டிய சந்துபொந்துகளில் சரியாய்த் திரும்பி போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு சரியாய்ச் சென்று சேர்ந்திருப்போம்.

ஒரு வேலையை அல்லது செயலை (Activity) நாம் செய்யும்போது, நாம் செய்வது நம் மனதில் பதிகிறதா? அல்லது மனது சொல்கிறபடி நாம் செய்கிறோமா?

இரண்டும் ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். முதன்முதலில் நாம் செய்வதுதான் நம் மனதில் பதிகிறது. ஒருமுறை பதிந்துவிட்டால் அதன்பின் மனது சொல்கிறபடி நாம் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம்.

சிகரெட் பிடிக்க நினைப்பதும், சூடா டீ சாப்பிடணும்போலத் தோணுது என்பதும், அழகான பெண்ணைப் பார்த்தவுடன் 'லுக்கு' விடத் தூண்டுவதும் இந்த மனதினால்தான். உணர்வு மனதுடன் (Conscious mind) முதன்முதலில் நாம் செய்யும் ஒரு செயல், ஆழ்மனதில் (Subconscious mind)பதிந்து விடுகிறது. நமது உணர்வு மனதில் பதிந்த எந்த விஷயத்தையும் எளிதாக நாம் அழிக்க முடியும். ஆனால் ஆழ் மனதில் பதிந்தவற்றை அகற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைக் கவனித்திருப்போமே. அவர்களாகவே அதை விட்டுவிடவேண்டும் என ஆசைப்பட்டாலும் அது முடிவதில்லை, அவ்வளவு எளிதில். நல்லதோ கெட்டதோ முதன்முதலில் பதிந்த விஷயம், பதிந்ததுதான். திடமான நம்பிக்கை (Will power) வேண்டும் அதை மாற்றுவதற்கு.

இப்படி பற்பல விஷயங்களைப் பழக்கத்தினால் நாம் அறியாமலேயே சரியாகச் செய்துகொண்டிருப்போம்.
அதையே அறிந்து செய்தால் என்ன?


இதிலென்ன 'அறிய' வேண்டிக் கிடக்கிறது?

ஐய்யோ..சாமி.. 'அறிந்து' செய்துதான் பார்ப்போமே!

சரி.. எப்படி செய்வது? எதற்காக செய்கிறோம்?

நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. புதிய மொந்தையில் பழைய கள்! தற்போது உலகத்தில் சொல்லப்படும் தத்துவங்கள் எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தான். சொல்லப்பட்ட விஷயங்களை தங்கள் மொழி நடைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சுவாரசியமாகச் சொல்கிறார்கள், அல்லது சொல்ல நினைக்கிறார்கள்!

புத்தர் காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் படித்திருப்போம். புத்தரும் அவரது சீடர்களும் யாசகம் பெற்றுசாப்பிடுவதுதான் வழக்கம். ஒரு நாள், ஒரு இளம் சீடர் தனது மனம் அதிகம் சலனமடைவதாக புத்தரிடம் சொன்னார்.

விளக்கிக் கூறுமாறு புத்தர் கேட்க, இளம் சீடரும் தாம் ஒரு வீட்டுக்கு பிக்ஷை வாங்கப்போகும்போதேல்லாம் அந்த இல்லத்தம்மணியின் அழகு தம் மனதைச் சலனமடையச் செய்வதாகவும், பிக்ஷை வாங்கும்போது குற்ற உணர்ச்சியினால் கைகள் நடுக்கமடைவதாகவும் கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு இனிமேல் தன்னால் செல்ல இயலாதெனவும் தனது எண்ணங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் சற்று நடுக்கமுடன் கூறினார்.

புத்தர் வாஞ்சையுடன் பதிலளித்தார், "உனது எண்ணங்களைக் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. பிட்சை கேட்க மட்டுமே நீ சென்றிருக்கிறாய் என்பதை உணர்வில் வைத்திரு"

அந்த வீட்டிற்குச் சென்ற சீடருக்கு மீண்டும் மனம் தடுமாற, அப்பெண்மணி கேட்டார், "எம்மை அடைய வேண்டுமென்று உமக்குத் தோன்றுகிறதா?"

அரண்டு போய்க் கேட்டார் சீடர். "எனது எண்ணங்கள் உன்னை எட்டுகின்றனவா?"

பெண்மணி சொன்னார், "ஆம். தியானம் செய்து செய்து மனம் சூன்யமாகி விட்டது"

சீடர் திரும்பி வந்து நடந்ததைக் கூற, புன்னகை புரிந்த புத்தர் "இனிதான் நீ அங்கே அடிக்கடி செல்ல வேண்டும். உனது எண்ணங்களை மீண்டும் மீண்டும் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. நீ யார் என்ற தெளிந்த எண்ணத்துடன் அந்த அம்மணியைக் காண்பாயானால் உன் மனம் சலனமடையாது" என்றார்.

தொடர்ந்து அந்த வீட்டிற்குச் சென்ற சீடர், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக தனது எண்ண அலைகளை உற்று கவனித்து, அது தடுமாறும் போதெல்லாம் தான் ஒரு துறவி என்றும், தான் வந்திருப்பது யாசகம் கேட்க மட்டுமே என்றும், அப்பெண்மணியின் முகத்தைக் காணும்போதெல்லாம் மனதில் விழிப்புணர்வோடு யாசகம் கேட்கலானார்.

நாளடைவில் எந்தச் செயலைச் செய்தாலும் முழு விழிப்புணர்வுடன் தனக்கு தேவை எது, தேவையில்லாதது எது என்று தெளிந்த அறிவுடன் செய்வது பழக்கமாகவே ஆகிவிட்டது சீடருக்கு.

அவ்வளவுதான் விஷயம்.

தன் மனதைக் கவனிக்கும் இந்த சுயவிழிப்புணர்வு நிலையினால் கிடைக்கும் பயன்கள் :

ஒரு செயலில் நிலைத்த மனம் (Concentration)
நல்ல/கெட்ட பழக்கங்களைப் பகுத்தறியும் தெளிந்த அறிவு
மன அழுத்தத்திற்கு ஆட்படாமை
விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன்

மிக மிக முக்கியமான இன்னொரு பயன், நாம் மட்டும் தெளிவடைவது மட்டுமன்றி, நமது நேர்மறையான எண்ண அலைகள் நம்மைச் சுற்றியுள்ளோர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் தெளிவை உண்டாக்கும்.

இதைப் படித்ததோடல்லாமல் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். முதலில் மூன்று மணிநேரம் செய்து பார்ப்போம் என ஆரம்பியுங்கள். தினமும் வேலை நேரங்களில் மூன்று மணி நேரம் போதும். சிறிது நாட்களுக்குப் பின் மூன்றை ஆறு ஆக்குங்கள்.

தினமும் காலையில் மனதில் இன்றைய பொழுதை என் முழு மன விழிப்புணர்வுடன் கழிப்பேன். எந்தக் காரியமானாலும் சரி, நான் செய்வதை நானே கவனிப்பேன், ஒரு மூன்றாம் நபரைப்போல.

படிப்படியாகச் செய்யுங்கள், அவசரம் வேண்டாம். இரண்டு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க மாற்றம் தெரியும். இரண்டே மாதங்களில் அது பழக்கமாகவே ஆகிவிடும்.

அலுவலகத்தில் முக்கிய வேலையில் இருக்கும்போது தேவையில்லாமல் முதல்நாள் பார்த்த சினிமாவின் தாக்கம் மனதில் நெருடுகிறதா, எண்ணங்களை தன் போக்கில் இழுத்துச்செல்கிறதா?

வேலையை நிறுத்துவோம் - மனதைக் கவனிப்போம் - தற்போது என்ன செய்கிறோம் என்ற தெளிவு பெறுவோம் - வெற்றிப் புன்னகையுடன் வேலையைத் தெடர்வோம்.

Apr 7, 2009

குங்கும பூவே கொஞ்சும் புறாவே ..



குங்குமப்பூ அப்படினா நமக்கு உடனே ஞாபகம் வரது தமிழ் படத்தில வர்ர சீன்தான் குழந்தை கலரா பிறக்கனும்னா குங்குமப்பூவ பால்ல கலந்து குடிக்க சொல்லுவாங்க. அது தவிர இந்த பூவ பத்தி வேற ஒன்னும் தெரியாது. அது மட்டும் இல்ல நான் இது வரைக்கும் குங்குமப்பூனா குங்குமக் கலர்ல சிவப்பா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது குங்குமப்பூ பிங்க் கலர்ல சூப்பரா கீழ படத்துல இருக்கற மாதிரி இருக்கும்னு.






அப்புறம் நாம பயன் படுத்தறது குங்குமப்பூக்களின் இதழ்களை இல்ல. அதுக்கு உள்ள இருக்கற மகரந்த இதழ்கள் மட்டும்தான். மேல படத்தில இருக்கற பூவுக்கு உள்ள இருந்து வர சிவப்பு மகரந்தம்தான் நாம பயன்படுத்தற குங்குமப்பூ. 1500 மலர்களில் இருந்து எடுத்தா அதிக பட்சம் 50 மிகி அளவுதான் குங்குமப்பூ கிடைக்கும். அதனாலதான் அது விலை மிக அதிகமா இருக்கு.


குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க.
குங்குமப்பூவினால நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு எல்லாத்துக்கும் மருத்தா பயன்படுது. ஆனா அளவுக்கு அதிகமாவோ அல்லது மருத்துவர் ஆலோசனை இல்லாமயோ பயன்படுத்துனா இது மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குமாம். அதனால அதிகமா உபயோகப்படுத்த கூடாது.

அது மட்டும் இல்லீங்க குங்குமப்பூ குழந்தைக்கு நிறத்தை குடுக்கும்னு எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனா பெரியவங்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தறாங்க.
எது எப்படியோ இந்த குங்குமப்பூ வழக்கம் போல எல்லா மலர்களையும் போலவே அழகா இருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு.

PENDRIVEவை RAM ஆக மாற்றலாம் !!!

நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும்.

இதனுடைய சிறப்பம்சங்கள் :

1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.

2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.

3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்

For Download

Apr 5, 2009

விளையாட்டு வினையாகாமல்



Super Bluetooth Hack / free download


You need a program called "Super Bluetooth Hack" (it's also called "BT Info").

With the program you can do things on the other phone such as:
- read SMS messages
- read contacts
- change profile
- play ringtone (even if phone is on silent)
- play songs
- restart the phone
- turn off the phone
- restore factory settings
- change ringing volume
- call from the other phone (it includes all call functions like hold etc.)


கார்போஹைட்ரேட்

Glucose காரின் எஞ்சினுக்கு பெட்ரோல் எப்படியோ அப்படித்தான் உடல் என்கிற எந்திரத்திற்கு கார்போஹைட்ரேட் என்கிற உணவுப் பொருள். குளுகோஸ் என்பதுதான் எளிமையான கார்போஹைட்ரேட். இது ரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலந்து உடல் வேலை செய்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. பட்டினியாய் கிடப்பவன் சோர்ந்து போவதும், உணவு சாப்பிட்டவுடன் உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படுவதும் இதனால்தான்.

நீங்கள் தண்ணீரில் குளுகோசை கரைத்துக் குடித்தால் உங்களுடைய செரிமான உறுப்புகள் வழியாக குளுகோஸ் நேரடியாக இரத்தத்தில் கலந்து சக்தி கிடைத்துவிடுகிறது. குளுகோஸ் மூலக்கூறில் கார்பன் அணுக்களும், நீர் மூலக்கூறும் அடங்கியிருக்கின்றன. ஒரு குளுகோஸ் மூலக்கூறில் ஆறு கார்பன் அணுக்களும், ஆறு நீர் மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.

குளுக்கோஸ் ஒரு எளிமையான சர்க்கரைப்பொருள். இதனால்தான் நாக்கில் பட்டவுடன் இனிக்கிறது. குளுக்கோஸின் வேறொரு வடிவம் ஃப்ரக்டோஸ். இது பழங்களில் இருக்கிறது. ஃப்ரக்டோஸும், குளுக்கோஸும் ஒரே மாதிரியான மூலக்கூறுகள்தான். ஆனால் அணுக்களின் அமைப்பில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. நம்முடைய கல்லீரல் ஃப்ரக்டோசை குளுக்கோசாக மாற்றுகிறது. இதேபோல் நாம் சீனி என்றழைக்கும் சுக்ரோஸ், பாலில் மறைந்துள்ள லாக்டோஸ், மாவில் மறைந்துள்ள மால்டோஸ் என்பவையும் குளுக்கோசின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.

குளுக்கோசும், ஃப்ரக்டோசும் நேரடியாக ரத்தத்தில் கலந்து கொள்ளக்கூடியவை. ஆனால் லாக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் இவையெல்லாம் என்சைம்கள் உதவியால் மாற்றமடைந்து ரத்ததில் கலக்கப்படுகின்றன. அடுத்தமுறை பாக்கெட் உணவை வாங்கும்போது கார்போஹைட்ரேட் என்கிற தலைப்பில் என்னென்ன உள்பிரிவுகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மிகவும் சிக்கலான குளுக்கோஸ்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்களும், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை என்சைம்களின் உதவியால் சிதைவடையச் செய்து எளிமையான குளுக்கோஸாக உடல் உறுப்புகள் மாற்றுகின்றன.

சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சிதைவடைந்து இரத்தத்தில் கலப்பதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். ஒரு இனிப்பான சோடவைக் குடித்தால் ஒரு நிமிடத்திற்கு 30 கலோரிகள் என்ற வீதத்தில் குளுக்கோஸ் இரத்தத்துடன் கலந்து விடுகிறதாம். ஆனால் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஒரு நிமிடத்திற்கு 2 கலோரிகள் என்ற வேகத்தில் இரத்தத்துடன் கலக்கிறதாம்.

நன்றி:- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)

Apr 2, 2009

விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

நன்றி:-maximum இந்தியா.

Apr 1, 2009

ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் !!


புதுடில்லி: ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு இனி தயங்க வேண்டியது இல்லை. மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் செய்தால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஒரு பண பரிமாற்றத்துக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால், சாதாரண மற்றும் நடுத்த வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். இதையடுத்து, பண பரிமாற்றத்துக்கு எந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் எந்தவித தயக்கமும் இன்றி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இதன் எதிரொலியாக, சில வங்கிகள் தங்களது ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ஓரியண்டல் வணிக வங்கி நிர்வாக இயக்குனர் சின்கா கூறுகையில், "நாடு முழுவதும் புதிதாக 60 ஏ.டி.எம்.,களை திறக்க முடிவு செய்துள்ளோம்'என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை வரையறுத்துள்ளதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்'என்றார்.