Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Nov 12, 2013

RGO, GMT, UT, UTC என்றால் என்ன?



      இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்?? தேவைதான்..!
      அன்றைய தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.

      GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்.... 
  • RGO- Royal Greenwich Observatory (ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம்)
  • GMT- Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
  • UT- Universal Time (உலகளாவிய நேரம்)
  • UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்

Apr 1, 2009

ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் !!


புதுடில்லி: ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு இனி தயங்க வேண்டியது இல்லை. மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் செய்தால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஒரு பண பரிமாற்றத்துக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால், சாதாரண மற்றும் நடுத்த வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். இதையடுத்து, பண பரிமாற்றத்துக்கு எந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் எந்தவித தயக்கமும் இன்றி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இதன் எதிரொலியாக, சில வங்கிகள் தங்களது ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ஓரியண்டல் வணிக வங்கி நிர்வாக இயக்குனர் சின்கா கூறுகையில், "நாடு முழுவதும் புதிதாக 60 ஏ.டி.எம்.,களை திறக்க முடிவு செய்துள்ளோம்'என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை வரையறுத்துள்ளதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்'என்றார்.

Mar 23, 2009

பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 0% கீழே சென்றால் நல்லதா?

பணவீக்கம் என்றால் என்ன என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம். பொருட்களின் விலை கூடுவதை பணவீக்கம் என்கிறோம். அதாவது ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை இப்போது Rs.110/- ஆக இருந்தால் பணவீக்கம் 10% என்கிறோம். இதற்கு நேர் மாறாக ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை குறைந்து Rs.90/- ஆக இருந்தால் இதையே DEFLATION என்கிறோம் (பணவீக்கத்திற்கு நேர் எதிர்மறையானது). பணவீக்க்கம் என்பது நம்முடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது என்றால் அதற்கு நேர்மறையான DEFLATION பணத்தின் மதிப்பை கூட்டுகிறது. அட இது நல்ல இருக்குதே என்று சொல்ல தோணலாம். அனால் இதனுடைய தாக்கம் என்ன என்று கொஞ்சம் ஆழ்ந்து கவனிதொமென்றால் இப்படி சொல்ல தோணாது.

அண்மைக்காலங்களில் 13% வரை இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இந்த பணவீக்கம் இப்படியே குறைந்து 1% ஆகி அதன் பின் 0% ஆகி அதன் பின் -1% என்று வரும் போது நாம் அதை DEFLATION என்கிறோம். (பணவீக்கத்திற்கு எதிர்மறையான வார்த்தை என்ன என்று தேடிப்பார்த்தேன்...ம்ஹூம் கிடைக்கவில்லை அதனால் DEFLATION என்று எழுத வேண்டிய கட்டாயம்...!!! பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

பணவீக்க காலங்களில் பொருட்களின் விலை கூடும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். கூடுகின்ற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மக்களிடம் இருக்கும் பண நடமாட்டத்தை குறைக்கும் விதமாக வங்கிகள் அதக வட்டி தந்து மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் முடக்க முயற்சி எடுக்கும். கையில் பண நடமாட்டம் குறையும் பொது பொருட்களை வாங்குவது குறையும். வாங்குவது குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இதைதான் மத்திய வங்கி (RBI) செய்யும். மக்களிடம் பண புழக்கத்தை குறைத்து, அதன் மூலம் பொருட்களின் விலையை குறைய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணபுழக்கத்தை குறைக்க வங்கிகள் அதிக வட்டி தரும். பணவீக்க காலங்களில் இதெல்லாம் நடக்கும் என்றால், பணசுருக்கம் அல்லது DEFLATION காலங்களில் இதற்கு நேர்மறையாக வங்கிகள் திட்டங்களை வகுக்கும். இந்த விஷயத்தை கவனிக்கும் முன் DEFLATION ஆனால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

DEFLATION என்றால் பொருட்களின் விலை குறையும் என்று பார்த்தோம். பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். பொருட்களின் விலை குறைகிறது என்றால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உற்பத்திக்கு செய்த செலவை கூட விற்று வரும் வருமானம் மூலம் எடுக்க முடியாமல் போகலாம். ஆக பொருட்களின் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைப்பார்கள். உற்பத்தியை குறைக்கும் போது தொழிலாளர்களை குறைப்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வேலை இல்லாமல் போவதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். வேலை இல்லை என்பதால் கையில் பணம் இல்லை, பணம் இல்லை என்பதால் பொருட்கள் வாங்க முடியாது. பொருட்களை வாங்க ஆள் இல்லை என்னும் சூழ்நிலை வரும்போது, உற்பத்தியாளர்கள் இன்னும் விலையை குறைக்க வேண்டிய அவசியம். அப்படியாவது கிடைத்த விலைக்கு விற்கலாமே என்று எண்ணி, உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வரும். அப்படி மீண்டும் விலை குறைத்து, நஷ்டத்திற்கு வருவதால் மேற்கொண்டு உற்பத்தியை கூட்ட தயங்கி, இன்னும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை, அதனால் இன்னும் வேலை இழப்பு. இப்படி ஒரு சைக்கிள் மாதிரி விலை குறைப்பு, உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத தன்மை என்று இது ஒரு புதைகுழி மாதிரி பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். இபப்டி ஒரு சூழ்நிலை இருப்பதால் புதிதாக முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இருக்காது. அதனால் முதலீடு பாதிக்கும், புதிய முதலீடு இல்லாமல் இருப்பதால், வேலைவாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, வாங்கும் சக்தி இல்லை என்று பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

இப்படி DEFLATION என்ற ஒரு நிலை வந்தால், மக்களின் வாங்கும் சக்தியை கூட்ட, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கி தரும் வட்டி விகிதங்களை குறைக்கும். அதாவது, நம் சேமிப்பை வங்கியில் வைப்பதை விட, கையில் வைத்துக்கொள்ளலாம், வங்கி வட்டி என்பது ஒரு லாபமான விஷயமில்லை என்னும் சூழ்நிலைக்கு வங்கி வட்டி குறையும். அதேமாதிரி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் வங்கியில் நம் பணத்தை deposit செய்தால் அந்த வங்கி நமக்கு வட்டி தராது - 1996 முதல் 2006 வரை ஜப்பானில் இந்த நிலை இருந்ததற்கு காரணம் DEFLATION என்று தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் உண்மை நிலவரம். ஆக DEFLATION ஆனால் இந்த அளவுக்கு கூட நிலைமை போகலாம். இந்தியாவில் சென்ற ஆகஸ்ட்-ல் 12.91% ஆக இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இதுவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 0% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை DEFLATION இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உற்பத்தி (IIP) குறைந்திருப்பதை கவனிக்க வேண்டும். சீன DEFLATION ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏற்கனவே சீனாவில் பணவீக்கம் -1.9% ஆக இந்த ஆண்டு பிப்ரவரி இல் இருந்தது. ஒருமுறை பணவீக்கம் குறைந்து 0% கீழே சென்று விட்டதும் அதை DEFLATION என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து 0% கு கீழே இருந்தால் தான் அது DEFLATION என்று கருதப்படும்.

உலகின் மற்ற நாடுகளில் DEFLATION இருந்திருக்கிறதா என்று பார்தோமென்றால் ஆம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்தில் 1921-ல் 10%, 1922-ல் 14% 1930க்களில் 3 முதல் 5% DEFLATION இருந்திருக்கிறது. அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க DEFLATION மூன்று காலக்கட்டங்களில் இருந்ததாக சொல்லலாம். 1836-ல் கிட்டதத்த 30% DEFLATION, 1875 முதல் 1896 வரையான காலக்கட்டங்களில் 1.7%, 1930 - 1933 இல் 10% இருந்திருக்கிறது.

ஆக இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவிலும் DEFLATION வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

நன்றி:-திரு.கல்யாணசுந்தரம்.

Mar 17, 2009

பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல்

அமெரிக்க பொருளாதாரச் சிக்கல் திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. தேவையான கட்டுப்பாடுகளைக் கண்மூடித்தனமாக நீக்கியதால் வந்த வினையே இது. அது குறித்து சிறிது பார்க்கலாம்.

இதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போருக்கு முன் 1929-ஆம் வருடத்தில் நிகழ்ந்த Great Depression என்ற அமெரிக்காவின் மிக மோசமான பொருளாதாரச் சிக்கலிலிருந்து அமெரிக்கா வெற்றிகரமாக மீண்டிருக்கிறது. சரியான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் அது சாத்தியமாகி இருக்கிறது. அதன் பின்னர் 1973 முதல் 1982 வரையிலான கால கட்டத்திலும் அமெரிக்கப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவினைச் சந்தித்திருக்கிறது. இப்போது நிகழ்ந்ததைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்காவை விட்டுத் தப்பியோடினார்கள். ஜப்பானிய நிறுவனங்கள் தலையெடுத்து அமெரிக்காவின் தொழில்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு அச்சுறுத்தலை ஆரம்பித்தன. நிறுவனங்கள் மூடப்படுவதும், வேலை வாய்ப்பின்மையும் அமெரிக்காவில் தொடர்கதைகளாயின. எதிர்பாராத வகையில் OPEC எனப்படும் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை பத்து மடங்காக உயர்த்த, அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. Aramco போன்ற பெரும் எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்கர்களின் கைகளை விட்டுப் சென்றதும் அப்போதுதான் நிகழ்ந்த ஒன்றே.

அமெரிக்கக் கல்லூரிகளில் பெரும் கலவரங்கள் நடக்க, நாடு முழுவதும் குற்றங்களின் எண்ணிக்கை பெருகியது. நியூயார்க் போன்ற பெருநகரங்கள் செலவிடப் பணமின்றி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. நிக்ஸன் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவரின் உப-ஜனாதிபதி ஊழல் குற்றச் சாட்டின் பேரில் ராஜினாமா செய்ய நேர்ந்தது. வியட்நாமியப் போரின் தோல்விக்குப் பிறகு, சைகானின் அமெரிக்கத் தூதரகத்தின் கூரையிலிருந்து ஹெலிகாப்டகள் அமெரிக்கர்களை மீட்ப்பதை உலகம் காண நேர்ந்தது. ஆப்கானிஸ்தானுக்குள் அன்றைய சோவியத் யூனியனின் படைகள் நுழைய, அமெரிக்க ஆதரவு மன்னர் ஷா இரானை விட்டு விரட்டப்பட்டார். அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் தனது பதவிக்காலத்தின் இறுதி மாதங்களில், இரானியர்களால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 52 அமெரிக்கர்களை விடுவிக்கப் பேரம் நடத்திக் கொண்டிருந்தார். சிதறிக் கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சரி செய்ய எந்த முயற்சியும் செய்யாமல் அல்லது செய்ய இயலாமல்.

1980-இல் அமெரிக்கத் தொழிற்சாலை உற்பத்தி ஏறக்குறைய நின்றே போனது. ரேடியோ, டெலிவிஷன் போன்ற எலக்ட்ரானிக் சாதன உற்பத்தியை ஜப்பானும், கனரக இயந்திரம் மற்றும் இயந்திர பாகங்களைத் தயாரிப்பதை ஜெர்மனியும் கைப்பற்றிக் கொண்டன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருந்த இரும்புச் சுரங்கங்களும், பிற ஆலைகளும், ஆடைகள் தயாரிக்கும் தயாரிக்கும் தொழிலும் மிக மோசமாக பாதிக்கப்பட, அசைக்க முடியாத நிறுவனம் என்று கருதப்பட்ட IBM கூட ஜப்பானின் Amdhal, Fujitsu போன்ற போட்டி நிறுவனங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான காலகட்டமாக இருந்தது. மேலும், 1979-80-இல் பண வீக்கம் 14 சதவீதம் அதிகரித்துடன், பெட்ரோலின் விலையும் பல மடங்கு உயர, சாமானிய அமெரிக்கர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். முடிவெடுக்கும் திறனற்றவராக இருந்த ஜிம்மி கார்ட்டர், பெட்ரோலின் உபயோகித்திற்கான கட்டுப்பாடுகளை விதித்ததுவும் விலையுயர்விற்கு அடிகோலியது (1981-இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரொனால்ட் ரேகன் செய்த முதல் காரியம் பெட்ரோலிய கட்டுப்பாடுகளை நீக்கியதுதான்). அமெரிக்க GDP (Gross Domestic Product) -1.9 சதவீதத்திற்கு வீழ்ந்தது (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி அதுவே).

ஜனநாயக் கட்சியைச் சார்ந்த ஜிம்மி கார்ட்டருக்குப் பின், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ரேகன் பதவியேற்றார். திறந்த பொருளாதாரச் சந்தைப் பொருளாதாரம் (Free Market Economy) ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவரது பதவிக் காலத்தில் ரேகன் எடுத்த பல நடவடிக்கைகளே இன்றுவரை அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை. ரேகனின் வரியைக் குறைப்பது, குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் பங்குச் சந்தையை சுதந்திரமாக இயங்கவிடுவது (Lower Taxes, Free Markets and Minimal Regulations) போன்ற பாலிசிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாறுதல்களைக் கொணர, அமெரிக்கப் பொருளாதாராம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்திற்குச் சென்றது. சோம்பிக் கிடந்த அமெரிக்க நிறுவனங்களிலிடையே போட்டி மனப்பான்மை பெருகி உற்பத்தியும் பெருக ஆரம்பிக்க, அதனடிப்படையில் அமெரிக்கப் பங்குச் சந்தையும் உயர ஆரம்பித்தது. எதிர்பாராத விதமாக 1987-ஆம் வருடம் பங்குச் சந்தை பெரும் சரிவுகளைக் கண்டாலும், அமெரிக்கா அதனை விரைவாகச் சரிசெய்து கொண்டது.

ரொனால்ட் ரேகனுக்குப் பின் வந்த ஜார்ஜ் புஷ் சீனியரின் பதவிக்காலத்தில் அமெரிக்கப் பொருளாதார முன்னேற்றம் மீண்டும் இறங்கு முகமானது. அவருக்குப் பின் வந்த பில் கிளிண்டன் காலத்தில் அதிர்ஷ்டவசமாக கணிணித்துறை முன்னேற்றமைடைய, டாட்.காம்களின் பெருக்கத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது என்பது வரலாறு. செலவினங்களில் கட்டுப்பாடுகளை விதித்துச் சீர்படுத்திய பில் கிளிண்டன் பதவி விலகுகையில் அமெரிக்கக் கடனில் பெரும்பகுதி அடைக்கப்பட்டு, ஏறக்குறைய $300 பில்லியன் டாலர்கள் உபரியாக வைத்துச் சென்றார். ஜார்ஜ் புஷ் ஜூனியரின் கட்டுப்பாடுகளற்ற செலவினங்களும், இராக்கிய யுத்தமும், இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவை கடனாளியாக்கியிருக்கிறது என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அது ஒருபுறம் இருக்க, இன்றைய பங்குச் சந்தை சிக்கலானது குடியரசுக் கட்சியனிரின் அடிப்படைக் கொள்கையான கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தின் அடைப்படையில் விளைந்தது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1910-லிருந்து 1970 வரையிலான காலகட்டத்தில் உலகின் முதல் பத்து பெரும் தொழிற்சாலைகள் அமெரிக்காவிலேயே இருந்தன. பின் சிறிது சிறிதாக நிலமை மாறத் துவங்கியது. அமெரிக்கப் பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் இது போன்ற நிறுவனங்களின் இலாப, நஷ்டங்களின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆனால் 1980-ற்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தையின் போக்கு கணிதவியல் வல்லுனர்களாலும், புதிதாக கல்லூரியிலிருந்து படித்து வெளிவந்த, நிஜ உலக அனுபவம் அதிகமில்லாத MBAக்களாலும் தீர்மானிக்கப்பட்டது. எளிதில் புரிந்து கொள்ளவியலாத கடினமான கணித ·பார்முலாக்களைக் கொண்டு தயாரான ம்யூச்சுவல் ·பண்டுகளும், டெரிவேட்டிவ்களும் (Derivatives) இன்ன பிற பங்குகளும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பெருமளவில் உலா வர ஆரம்பித்தன. அவற்றில் முதலீடு செய்த பெரும் வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் லாபங்களை அள்ளின. ஏறக்குறைய பண மழை கொட்டியது.

இங்கு ஒன்றை நாம் நினைவு கூற வேண்டும். பங்குச் சந்தை உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தது. ஒருவிதமான ஆட்டுமந்தை மனோபாவத்துடனே உலகின் அனைத்து பங்குச் சந்தைகளும் இயங்குகின்றன. கணிப்பொறி இயந்திரங்களோ அல்லது கணித ·பார்முலாக்களோ அதன் சுழற்சியை இன்றுவரை கணிக்க இயன்றதில்லை. அனைத்தும் அறிந்தவர்களாக அறியப்படுபவர்களே அதிகபட்ச தவறுகளையும் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். Large-Term Capital Management (LTCM) என்ற நிறுவனம் அதற்கு ஒரு உதாரணம். LTCM நிறுவனத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய Myron Scholes மற்றும் Robert Merton என்ற இருவரும் பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசும் பெற்றவர்கள். இவ்விருவரும் சாலமன்-ஸ்மித்-பார்னி நிறுவனத்தைச் சேர்ந்த John Meriwether என்பவருடன் சேர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த நிறுவனமே LTCM என்பது. இதில் பணத்தைக் கொட்ட பெரும் வங்கிகளும், பங்குவர்த்தக நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் வரிசையில் நின்றார்கள்.

LTCM-இன் முக்கிய நோக்கம், மொத்தமாக ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கிவைத்து விற்காமல், தொடர்ச்சியான, நூற்றுக்கணக்கான சிறிய ட்ரோடிங்குகளைச் செய்வது. பெறுவது சிறிய லாபமாக இருந்தாலும், நூற்றுக் கணக்கில் ட்ரேடிங் செய்வதால் இறுதியில் அதிக லாபம் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. சுருங்கச் சொன்னால், "கோழி போல இரையெடுத்து யானை போல மலம் கழிக்கும்" சமாச்சாரம். மேற்கண்ட நோபெல் பரிசு வல்லுனர்களின் மேற்பர்வையில் அதற்கான கணிப்பொறி புரோகிராம்கள் எழுதப்பட்டு, LTCM தன் பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கியது. குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த அந்நிறுவனத்தின் உச்ச நிலயில் மொத்த முதலீடு $100 பில்லியன் டாலர்களாக இருந்ந்து. எனினும் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெறும் நான்கே ஆண்டுகளில் அதன் முதலீடு $2 பில்லியனாகச் சுருங்கிக் கடைசியில் திவாலானது LTCM. நோபெல் பரிசு பெற்ற அறிவும் கூட அதன் சரிவைத் தடுக்க இயலவில்லை. பங்குச் சந்தையின் போக்கு குறித்தான ஒரு உதாரணம் இது.


காலம் காலமாக அமெரிக்கப் பங்குச் சந்தையின் வெளிப்படையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் உலக நாடுகளை ஈர்க்கும் ஒரு அம்சமாக இருந்து வந்திருக்கின்றது. உலக நாடுகள் பலவும் அமெரிக்க பங்குச் சந்தையிலும், தொழிற்சாலைகளிலும் தங்களின் முதலீடுகளை வைத்திருக்க அமெரிக்க நிதி நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மிக முக்கியமான ஒரு அம்சம். இன்று அந்த நம்பகத்தன்மை தகர்ந்திருக்கின்றது. இழந்த நம்பகத்தன்மையை அத்தனை எளிதாக மீட்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. இனி வரும் அமெரிக்க நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மை மீட்கப்படுவதும், படாமல் போவதும் அமையக்கூடும்.

அமெரிக்காவின் திடீர் சரிவிற்கு மூன்று முக்கியக் காரணங்களைக் கூறலாம். முதலாவது Sub-Prime Mortgage எனப்படும் தகுதியில்லாதவர்களுக்கான வீட்டுக் கடன்கள். இரண்டாவது, Credit Swap எனப்படும் கடன் உத்தரவாதப் பிரச்சினை. மூன்றாவது Derivatives Market எனப்படும் முதலீட்டுத் திட்டத்தின் வீழ்ச்சி. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க நிதிநிறுவனங்களின் பேராசை. அந்தப் பேராசையே மிகப்பெரும் நிறுவனங்களை மண்ணைக் கவ்வ வைத்திருக்கின்றது.

முதலில் சப்-பிரைம் மார்ட்கேஜ் சிக்கலைக் குறித்துப் பார்க்கலாம். ஒரே வரியில் சொல்வதானால், தகுதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கியதனால் உருவானதொரு பிரச்சினை எனலாம். இந்தியா போன்ற நாடுகளில் மாதம் ரூ.10,0000 சம்பாதிக்கும் ஒருவர் ரூ. 500,000-க்கு ஒரு வீடு வாங்க ஆசைப்படுவது சரியான ஒன்று. தன்னுடைய வாங்கும் சக்தி இன்னதென்று உணர்ந்தவர் எனலாம் அவரை. அதே ரூ. 10,000 சம்பாதிக்கும் மனிதர் ரூ. 1 கோடிக்கு வீடு வாங்க நினைத்தால்? அதுபோன்ற ஒரு ஆபத்தான ஏன் பைத்தியக்காரத்தனமான எண்ணம் வேறில்லை. முதலில் எந்த வங்கியும் அவருக்கு ரூ. 1 கோடி கடன் தர முன்வராது. ஒரு உதாரணத்திற்கு இந்திய அரசாஙகம் அந்த வங்கியை வற்புறுத்தி தகுதியற்றவர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள கடன்களைக் கொடுக்கும்படி நிர்பந்தித்தால்?... முடிவு என்னவாகும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அதுதான் அமெரிக்க Fannie Mae, Freddic Mac நிறுவனங்களுக்கும் நடந்தது.

Fannie Mae அல்லது Federal National Mortgage Association 1938-ஆம் வருடம் அமெரிக்க அரசாங்கதினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுக் கடன்களை அளிப்பது அதன் நோக்கம். அதற்குப் போட்டியாக Freddie Mac என்ற நிறுவனம் 1970-இல் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் அரசாங்க நிறுவனங்கள் எனினும், போட்டியின் மூலம் வீட்டுக் கடன் வழங்குவதைத் துரிதப்படுத்துவதும் அதன் நோக்கம். 2001-ஆம் ஆண்டு வரை சரியான முறையில் இயங்கி வந்த இந்நிறுவனங்கள் பின்னர் பேராசையுடன் சந்தேகத்திற்கிடமான கடன்களையும் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தன. அவ்வாறு வாங்கிய கடன்களை மீண்டும் பங்குச் சந்தையில் விற்பதன் மூலமும் வருவாய் பெருக ஆரம்பித்தது. ஆனால் அடிப்படையில் அந்நிறுவனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதினை உணர்ந்து கொள்ளவில்லை. அதற்கான விலையை இறுதியில் அவை கொடுக்க வேண்டியதாயிற்று.

இதனை இப்படி விளக்கலாம். நீங்கள் ஒரு பில்டர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஐம்பது இலட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டினைக் கட்டி, அதனைத் தெருவில் போகும் யாரோ ஒரு சுப்பனுக்கு விற்றுவிடுகிறீர்கள். மாதாமாதம் இத்தனை பணம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன். வீட்டினை வாங்கியவர் அந்தக் கடனைச் செலுத்த வசதியுள்ளவரா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. உடனடியாக் நீங்கள் அந்தக் கடனை Fannie Mae அல்லது Freddie Mac-இற்கு நல்ல லாபத்துடன் விற்றுவிடலாம். அந்நிறுவனங்கள் எந்தக் கேள்வியும் உங்களைக் கேட்காமல் அக்கடனை வாங்கிக் கொள்ளும். அதன் பின் வீட்டுக் கடனைக் கட்டுவதும், கட்டமலிருப்பதுவும் உங்கள் பிரச்சினையில்லை. அது சுப்பனுக்கும், Fannie Maeக்கும் உள்ளான பிரச்சினை. நீங்கள் அடுத்த இளிச்சவாயரைத் தேடிப் போகலாம். எப்படி ஏற்பாடு?

2001-ஆம் ஆண்டிற்கும் 2004-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற ஆபத்தான வீட்டுக் கடன்கள் $160 பில்லியனிலிருந்து $540 பில்லியனாக உயர்ந்தது. அமெரிக்காவெங்கும் இம்மாதிரியான கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரப்பலகைகளும், தபால்களும் மூழ்கடித்தன. யாருக்கு வேண்டுமானாலும் கடனளிப்போம் என்ற உத்தரவாதத்துடன். இந்தக் கடன்களை வாங்கிக் கொள்ள Fannie இருக்க்வே இருக்கிறது. பிறகென்ன கவலை? இதற்கு முன்னர் வீட்டுக் கடனளிக்கத் தயங்கிய சிறு வங்கிகளும், முதலீட்டாளர்களும் Fannieயின் உத்தராவதத்தால் உற்சாகமடைந்து கடன்களை வாரி வழங்கினர் மிகக் குறுகிய காலத்தில் Fannie உலகின் மிக வலிமையான வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமாக உயர்ந்தது. கவலையடைந்த பொருளாதார நிபுணர்களும், போட்டியாளர்கள் Fannie-ஐக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்க காங்கிரசை வேண்டும் போதெல்லாம், செனட்டர்கள் கடிதங்களால் சூழப்பட்டார்கள். கோபமுற்ற தொகுதி மக்கள், செனட்டர்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும், வசைகளையும் அனுப்பி வைக்க, அமெரிக்க அரசாங்கம் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தயங்கியது.

இறுதியில் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. Fannie Mae மற்றும் Freddie Mac திவாலாகும் நிலைமை ஏற்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் முதல் அடி விழுந்தது.

அடுத்த காரணம், வங்கிகளுக்கிடையேயான கண்மூடித்தனமான கிரடிட் ஸ்வாப் (Credit Swap) என்கிற சங்கதி. இதனை இப்படி விளக்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த பாங்க் ஆ·ப் அமெரிக்கா, இந்தியாவிலும் தனது கால்களைப் பதிக்க நினைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை இரண்டு வகையாகச் செயல்முறைப்படுத்தலாம். ஒன்று, பாங்க் ஆ·ப் அமெரிக்கா தனது கிளைகளை இந்தியாவில் திறப்பதின் மூலம். இரண்டு, ஏதாவது இந்திய வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து அதன் மூலமாக தனது வர்த்தகத்தை ஆரம்பித்தல். இவையிரண்டும் மிக நேரடியான செயல்முறைகள். அதிக ரிஸ்க் இல்லாத ஒன்று. இதுதவிர இன்னொரு ஆபத்தான குறுக்குவழியும் இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இந்திய வங்கியினால், இந்தியாவில் வழங்கப்படும் கடன்களுக்கான உத்தரவாதத்தை, ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலித்துக் கொண்டு வழங்குவது. ஏறக்குறைய இன்ஸ்யூரன்ஸ் போன்றதொரு ஏற்பாடு. இதனைத்தான் கிரடிட் ஸ்வாப் என்பார்கள்.

இதிலுள்ள ஆபத்து உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்திய வங்கியானது சரியான நபருக்கு, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் வலிமையுள்ள ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவேளை அக் குறிப்பிட்ட நபர் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் நஷ்டம் இந்திய வங்கிக்கல்ல. இதில் சம்பந்தமில்லாத அமெரிக்க வங்கிக்கு! 2001-இல் $1 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்த இந்த ஏற்பாடு, 2007-ஆம் வருட மத்தியில் $45 டிரில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இன்றைக்குப் பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் இந்தச் சுழலில் சிக்கி இருக்கின்றன. இதிலிருந்து மீண்டுவருவது பகீரதப்பிரயத்தனமாக இருக்கும்.

கிரடிட் ஸ்வாப்பின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. கடன் உத்திரவாதம் அளித்திருக்கும் அமெரிக்க வங்கியானது, மொத்த உத்திரவாதப் பணத்தின் மீதாக CDOs எனப்படும் Collateralized Debt Obligations-ஐ - ஏறக்குறைய பங்கு போன்றது - பங்குச் சந்தையில் விற்கும். சந்தையின் பெரு நிறுவனங்கள் அம்மாதிரியான பல CDOக்களை ஒன்று சேர்த்து CDO level II என விற்றார்கள். இன்னும் சில நிறுவனங்கள் ஒரு படி மேலே போய், CDO level IIIக்களை விற்றார்கள் (CDOs of CDOs). இத்தனைக்கும் அடிப்படை மிக ரிஸ்கியான, எங்கோ ஒரு ஆசிய நாட்டில் வாங்கப்பட்ட கடன்கள் என்பதினை பல நிறுவனங்கள் சட்டை செய்யவில்லை. பேராசையுடன் ஒன்றின் மேல் ஒன்றாக CDOக்களை அப்பாவிகள் தலையில் கட்டிக் கொண்டிருந்தார்கள். Citi Bank போன்ற மாபெரும் நிறுவனங்களின் சரிவும் இதன் பின்னனியிலேயே ஏற்பட்டது என்பதினை நினைவு கூறவேண்டும்.

அடுத்த பெரும் சரிவு Derivatives எனப்படும் பங்கு வர்த்தகத்தில் நிகழ்ந்தது. பங்குச் சந்தையிலிருந்து கடன் பெற நினக்கும் ஒரு நிறுவனம், தனக்குச் சொந்தமான கட்டிடங்கள், தன்னிடமுள்ள பங்குகள், அரசாங்க பாண்டுகள் இவற்றை ஈடாக வைத்துக் கடன் பெறும். ஏறக்குறைய அடகு போன்றதொரு ஏற்பாடு. உதாரணமாக, $1 பில்லியன் டாலர் கடனைப் பெற்ற நிறுவனமான A, சிறிது வட்டியுடன் அதே $1 பில்லியனை நிறுவனம் Bக்கும், B-யானது நிறுவனம் C மீண்டும் அதே $1 பில்லியனை வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்மூன்று நிறுவனங்களும் அமெரிக்காவின் மிகப்பிரபலமான, பலமுள்ளதாக அறியப்பட்ட நிறுவனங்கள். மூன்று நிறுவங்களின் கடன்களும், அந்நிறுவனங்களின் Derevatives-களின் அடிப்படையிலேயே கொடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நிறுவனமும் மற்றொன்றிற்குக் கடன் வழங்குவதற்கு முன், $1 பில்லியன் டாலருக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்து கொள்ளும். வலிமையான நிறுவனங்களாகையால் எந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும் பாலிசி வழங்கத் தயங்காது. நல்ல ப்ரீமியம் கிடைப்பதால் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் போட்டியிட்டுக் கொண்டு பாலிசிகளை வழங்கும். ஆக $1 பில்லியனானது, $3 பில்லியனுக்கு இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிறுவனம் C, Bக்கும், B, A-க்கும், A, பங்குச்சந்தைக்கும் கடனைத் திருப்பி அளித்துவிட்டால் எல்லம் சுபம். அவ்வாறு இல்லத பட்சத்தில் மேற்படி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் அப்பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். அமெரிக்காவின் மிகப்பெரும் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமான AIGக்கு அதுதான் நிகழ்ந்தது. AIG, திவாலாகிப்போன Lehman Brothersக்குக் கொடுக்க வேண்டிய தொகை ஏறக்குறைய $400 பில்லியன் டாலர்கள்!

இதுபோல இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் அத்தனை ஆழமானது. விரிவானது.

பல பத்தாண்டுகளாக உலகப் பொருளாதார இயந்திரம் அமெரிக்க நுகர்வாளர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது நாமனைவரும் அறிந்த ஒன்று. உலகின் உற்பத்திப் பொருள்களில் பெரும்பகுதி அமெரிக்காவை நோக்கியே சென்று கொண்டிருந்திருக்கிறன. அது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளாக இருந்தாலும் சரி, சவூதி அரேபியா, வெனிசுவேலா, இரான் போன்ற எண்ணை வள நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் தயாரிக்கைப்பட்ட பொருள்களாகவும் சரி. அமெரிக்கா உலக வர்த்தகத்தின் மையப்புள்ளியாகவே இன்றுவரை இருந்திருக்கிறது. அதேசமயம், இனி வரும் காலங்களின் அமெரிக்காவின் செல்வாக்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அனைத்தையும் புரட்டிப் போட்டிருக்கின்றது.

உள்நாட்டில் உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்த காரணத்தால், அமெரிக்கா தனது தொழிற்சாலைகளில் பலவற்றையும் வளரும் நாடுகளுக்கு நகர்த்த வேண்டியிருந்தது. இன்றைக்கு சாதாரண ப்ளாஸ்டிக் பொம்கைகளிலிருந்து விலையுயர்ந்த கார்கள் வரை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவதைப் பார்க்கின்றோம். இனி அதுபோல நடப்பதற்கான சாத்தியங்கள் குறையலாம்.

தற்போதைய பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டுவர அமெரிக்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகவும் ஆகலாம். இதிலிருந்து அமெரிக்கா மீண்டெழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான தொழில் நுட்ப அறிவும், இயற்கை வளங்களும், சிறப்பான உள்நாட்டுக் கட்டுமானமும், மனித வளமும் அமெரிக்காவிடம் இருக்கின்றது. தங்கள் நாடு குறித்த பெருமித உணர்வுடன், உழைக்கத் தயங்காத அமெரிக்கர்களும் அதனைச் செய்து முடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி : "வார்த்தை" மாத இதழ்



Mar 15, 2009

விஜயகாந்தின் வெற்றிக்கு காரணங்கள..!?

2006 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றதோடு விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்ற சமயத்தில் விஜயகாந்தின் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டன?

பிரபலமான நடிகர். அபரிமிதமான ரசிகர்கூட்டம். கைவசம் நிறைய பணம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் விசுவாசிகளைத் தன்பக்கம் இழுத்தார். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்படி ஆளுக்கொரு கோணத்தில் ஆயிரத்தெட்டு கருத்துகள். இவற்றில் எது நிஜம்? என்னுடைய பார்வையில் ‘தேர்தலைத் தனித்து சந்திப்பேன்’ என்று விஜயகாந்த் சொன்னதுதான் அவருடைய நிஜமான பலம். அதுதான் சுமார் எட்டரை சதவீத வாக்குகளையும் அவருடைய கட்சிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சியை அடையாளம் காட்டவேண்டும் என்றால் யாரைக் காட்டுவது? காங்கிரஸ். மதிமுக. பாமக. ம்ஹூம். இவை எல்லாமே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் திமுக அல்லது அதிமுகவின் அரவணைப்பில் இருக்கின்ற கட்சிகள். ஆனால் விஜயகாந்தின் தேமுதிக இந்தக் கட்சிகளுக்கு நேர் எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தேமுதிகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றும் பிரமாதமான திட்டங்கள் இல்லை. வசீகரிக்கும் வாக்குறுதிகள் எதுவும் இல்லை. வீட்டுக்கு வீடு பசு மாடு தருவேன் என்பன போன்ற அமெச்சூர் சங்கதிகள் அதிகம் எட்டிப்பார்த்தன. இருந்தும் வாக்காளர்கள் அவருடைய கட்சிக்கு வாக்களித்தார்கள். பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கழகங்களின் வெற்றி, தோல்வியைப் புரட்டிப் போட்டனர் தேமுதிக வேட்பாளர்கள். இத்தனைக்கும் காரணம், ‘நான் தனி ஜாதி’ என்ற விஜயகாந்தின் அறிவிப்புதான்.

2011ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதான் விஜயகாந்தின் இலக்கு என்றால் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது மிக அவசியம். கட்சி செலவுக்கு டெல்லி நிதி தருகிறது, கூட்டணி அமைத்தால் ஒன்று அல்லது இரண்டு எம்.பி சீட்டுகள் கிடைக்கும் என்பன போன்ற சிற்றின்பங்களுக்கு அடிமையாகும் பட்சத்தில் அதற்காக அவர் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகம்.

கூட்டணியில் இணைந்தால் குட்டையில் ஊறுகின்ற மட்டைகள் பட்டியலில் தேமுதிகவும் இடம்பெற்றுவிடும். இதன்மூலம் மாற்றுசக்தி என்ற பிம்பம் சுக்கல்நூறாகச் சிதறுவது நிச்சயம். தனித்துப்போட்டி என்பது பொன் முட்டையிடும் வாத்து. அவசரப்படு அறுத்துவிடுவது ஆபத்து.

ஒருவேளை திமுக அணியில் சேர்வதாக வைத்துக் கொள்வோம். அப்படிச் சேர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு வெற்றியாவது கிடைக்கும். ஆனால் அந்த வெற்றிக்கு விஜயகாந்தால் எந்தக்காலத்திலும் உரிமை கொண்டாட முடியாது. மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்காட்டி விடுவார் கலைஞர். (உதாரணம்: இந்திய கம்யூனிஸ்டின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் டி.கே. ரங்கராஜன்) இதன்மூலம் தேமுதிகவின் இமேஜ் அதளபாதாளத்துக்குச் செல்வவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. அதிமுக அணியில் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். தன்மானத்தைக் காவு கொடுத்துவிட்டுத்தான் கூட்டணி ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட வேண்டும்.

இந்தமுறை திமுக அணியில் இணைந்து போட்டியிடுகிறது தேமுதிக. வெற்றி அல்லது தோல்வி. திடீரென உறவில் சிக்கல் ஏற்படுகிறது. கூட்டணி முறிகிறது. அடுத்து அதிமுக அழைக்கிறது. கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குகிறது. உதாரணமாக, சரிபாதி இடம், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி. இப்படி ஏதோ ஒரு ஆஃபர். என்ன செய்வார் விஜயகாந்த்?

முழுசாக நனைந்துவிட்ட தொண்டர்கள் முக்காடை உதறுவதற்குத் தயாராகிவிடுவார்கள். அதிமுகவுடன் அணி அமைக்கவேண்டும் என்று குரலெழுப்புவார்கள். தவிர்க்க முடியாமல் அதிமுக அணியில் இணைந்தால் தேமுதிகவின் எதிர்காலம் என்னவாகும்? தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுகின்ற பாமக, மதிமுக போன்ற கட்சிகளில் இருந்து தன்னுடைய கட்சியை எப்படி வேறுபடுத்திக் காட்டுவார் விஜயகாந்த்? திண்டாட்டம்தான்.

நாடாளுமன்றத் தேர்தல் சூடு அடங்குவதற்குள் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். கூட்டணியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று தனித்துப் போட்டியிட்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இரு கழகங்களையும் சாட முடியும்? அவர்களுக்கு நான் சரியான மாற்று என்று எப்படி மக்களிடம் மார்தட்ட முடியும்? வாய்ப்பே இல்லை. சப்பை கட்டு கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு முறை கூட்டணி மாறும்போதும் கலைஞரும் சரி, ஜெயலலிதாவும் சரி, அழகாக தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள். தொண்டர்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். மக்களும்கூட அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதன் விளைவாகவே திமுக பாஜகவுடன் அணி அமைத்த போதும் வெற்றி கிடைத்தது. காங்கிரஸுடன் அணி அமைத்தபோதும் வெற்றி கிடைத்தது. அதிமுகவுக்கும் அப்படியே.

அதே பாதையில் விஜயகாந்த்தும் நாம் ஏன் கூட்டணி அமைத்தேன் அல்லது தனித்துப் போட்டியிடுவதற்கு என்ன காரணம் என்று தனித்தனியே விளக்கம் கொடுத்தால் தொண்டர்களும் ஏற்கமாட்டார்கள். மக்களும் வரவேற்க மாட்டார்கள். கலைஞர், ஜெயலலிதா சொல்லும் விளக்கத்தை விஜயகாந்த்திடம் இருந்தும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

தனித்தன்மை என்பது தேமுதிகவின் பொக்கிஷம். அதை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வதில்தான் தேமுதிகவின் எதிர்காலம் இருக்கிறது. தன்னுடைய பொக்கிஷத்தை போயஸ் தோட்டத்திலோ அல்லது கோபாலபுரத்திலோ அடகு வைத்துவிட்டால் அதை மீட்பது மிகக்கடினம்.

‘உன்னுடை பலம் எது? அதை அடிப்படையாகக்கொண்டு உன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானி’

இது எனக்கு மிகவும் பிடித்தமான வாசகம்.

நான் படித்ததில் பிடித்தது...

ரூபாயின் எதிர்காலம்...?.?.?

சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது.

இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அளித்தாலும், நிலைமை பெருமளவுக்கு மேம்பட வில்லை.

மேலை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிகள் பெருமளவு குறைந்து போனது. அதே சமயம், பெட்ரோலிய பொருட்கள் நீங்கலான இதர இறக்குமதிகள் இந்தியாவில் அதிக அளவு குறையாமல் போனது. இந்த நிலை காரணமாக, ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி பெருமளவு அதிகரித்தது.

இந்திய அரசின் மிகப் பெரிய நிதிப் பற்றாகுறை காரணமாக உலக தர வரிசையில் இந்தியாவிற்கான தர மதிப்பீட்டை தர நிர்ணய நிறுவனம் (S&P) சமீபத்தில் குறைத்து. இதனால், வெளிநாட்டு செலவாணியின் புதிய வரத்து குறையும் என்பதுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு செலவாணி வெளியே செல்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

உலகெங்கும் உள்ள பொருளாதார நிரந்தமற்ற நிலை காரணமாக, அந்நிய செலவாணியை வைத்திருப்போர் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவிற்கு (யானை படுத்தாலும் குதிரை உயரம்) திருப்பி எடுத்துச் செல்வது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் பற்றி சந்தேகங்கள் நிலவுவதால், பணம் இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமான அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தஞ்சமடைகிறது. இதனால், மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கரன்சியை பெருமளவு வர்த்தகம் செய்து வரும் சிங்கப்பூர் என்.டி.எப் (Non Delivarable Forwards) சந்தையில் ரூபாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில், ரூபாய் பலமிழந்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை (ஒரே டாலர் அளவில் அதிக ரூபாய்) என்றாலும், ஏற்றுமதி அளவு பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதால் (முதல்ல டாலர் கிடைக்கனுமில்ல?), அவர்களுக்கு பெரிய நன்மை இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்களுக்கும் ஓரளவுக்கு லாபமே.

அதே சமயத்தில், இறக்குமதியாகும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி ஏற்கனவே விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் விலைவாசிகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சியின் வலுவின் அடிப்படையிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும். அந்த வகையில், இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்நிய நிறுவனங்கள் எட்டி பார்க்காது என்று தோன்றுகிறது. இதனால், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து உள்நாட்டில் பண நெருக்கடி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப் படும்.

ஆக மொத்தத்தில் இந்திய கரன்சியின் வலுவிலப்பு, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ரூபாயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான விடை இங்கே.

மிக மோசமான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, கூடிய சீக்கிரம் வரப்போகிற பொதுத் தேர்தல், இப்போது நிலவி வரும் உலக அளவிலான "பொருளாதார தேக்க நிலை (Recession)" "வீழ்ச்சி நிலையாக (Depression)" உருவெடுக்கக் கூடிய ஆபத்து போன்ற விஷயங்களால், இன்னும் கொஞ்ச நாளைக்கு ரூபாய் தனது வீழ்ச்சியைத் தொடரும் என்றே தோன்றுகிறது.

நன்றி; மேக்‌ஷிமம் இந்தியா.

Mar 13, 2009

சத்யம் எப்படி அசத்தியம் ஆனது?

மின்னஞ்சலில் எனக்கு வந்த கட்டுரையை இங்கு போட்டுள்ளேன்..யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது நீங்களும் படிக்க....

நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.
ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது.. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.
சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.

MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.
SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை

ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள்.. பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.
மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.
கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.
ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோதுஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமாசுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது..
கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.

5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.
சம்பளம் தர பணமில்லை:

சத்யம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 53,000 பேர். இவர்களுக்கு சம்பளம் தர மட்டும் மாதம் ரூ.550 கோடி தேவை. இதைத் தவிர ஊழியர் நல நிதியாக மாதம் ரூ.10 கோடி தர வேண்டுமாம்.ஆனால் கையிருப்பில் இருப்பதோ, ராஜு விட்டுவைத்துள்ள ரூ. 340 கோடிதான். சம்பளம் போக நிர்வாகச் செலவுகளுக்கு இதைவிட இருமடங்கு பணம் தேவை என்கிறார்கள். எனவே இப்போதைய சூழலில் அடுத்த மாத சம்பளத்தையே கொடுக்க வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறது சத்யம்.10,000 பேர் நீக்கம்:இதற்கிடையே, இன்றைய சூழலின் அவசியம் கருதி 10,000 பேரை சத்யம் நீக்க முடிவு செய்திருப்பதாக பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.சம்பளச் சுமையைக் குறைக்கவும், நிர்வாகத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடிவடிக்கை அவசியம். எனவே அடுத்த 48 மணி நேரத்துக்கு நிறுவனத்தின் எந்த நடவடிக்கை குறித்தும் கேள்வி கேட்காதீர்கள் என சீனியர் நிர்வாகிகளுக்கு ராம் மைனாம்பதி கட்டளையிட்டுள்ளதாக சத்யம் ஊழியர்கள் தெரிவித்தனர்.ஆனாலும் 10,000 பேர் நீக்கம் குறித்து வரும் செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. சத்யம் வெளிப்படாயாக எதையும் அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள். வேலை நீக்கம் என்பது அடுத்த மாதம்தான் இருக்கும் என சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது.20,000 ஊழியர் விண்ணப்பம:சத்யம் நிறுவனத்தில் இனி எதிர்காலமில்லை என முடிவு செய்துவிட்ட பெரும்பாலான ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக தங்கள் விண்ணப்பங்களை வேலை வாய்ப்பு இணைய தளங்களில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று ஒருநாள் மட்டுமே சத்யம் நிறுவனத்தின் 7,800 ஊழியர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக, ஐடி-பிபிஓ ஊழியர் யூனியன் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ வேலை நீக்கம் என்ற நடவடிக்கையை சத்யம் கையிலெடுத்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போகிறோம் என கார்த்திக் தெரிவித்தார்
யார் குற்றவாளி?

முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.கடைசியாக . . .நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும்.