May 26, 2009
உருவ வழிபாடு - ஒரு ஸென் கதை
ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், "உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்" என்று கேட்டான்.
"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், "நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்" என்றார்.
கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், "உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.
அவனுடையக் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார் ஹுவாங்னியா.
வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், "ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?" என்று கோபத்துடன் கேட்டான்.
"ஏன்" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, "உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.
May 22, 2009
ஒட்டகத்தை கட்டி வைப்போம்
அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.
அவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.
எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே?” என்று பெருமையாக கூறினார்.
அப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.?
இன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.
எல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா? அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா? இது நமக்கு எதைத் தரும்? உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,
இந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள! அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை
ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.
மனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.
அதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.
தனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.
இதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.
இம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.
அனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.
கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்
இந்த கட்டுரை சமீபத்தில் நான் படித்ததில் பிடித்தது
May 16, 2009
வெறிபிடித்த மத நம்பிக்கை
மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்கும் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.
எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை நம்பலாம்.
மதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.
"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது" என்றார் என் நண்பர்.
"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.
"விதண்டாவாதம்" என்றார்.
"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ?" என்றேன்
"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்
அதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.
இன்னொரு உறவினர் ,
"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்
"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்" என்றேன்
மதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை.
Mar 14, 2009
தலபுராணங்கள் காரணம்.
இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம்.
கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள்.
தத்துவங்களாக கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள்.
எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்தவகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். எனவே இவை ஒருவகையில் மறை ஞானக்காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டடு.
இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.