Dec 29, 2009

ஜேம்ஸ் கமரூனின் AVATAR

அம்பு வில்லுடன் இருக்கும் அப்பாவிகளை அடியோடு அழிக்கவந்த பூமியில் உள்ள கேவலமான மனிதரால்,மாற்றுக்கிரக மக்கள் படும் அவலம் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது.

டைட்டானிக் திரைப்படத்தின் பின்னர் ஜேம்ஸ் கமரூன் எடுத்த AVATAR திரைப்படம் இன்று உலகம் முழுவதையும் ஓர் உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் வக்கிர மனம் கொண்ட மனிதர்களால் தாக்கப்படும் மாற்றுக்கிரக அபலை மனித்கள் உயிரைக் காக்கப் படும்பாடு, முள்ளிவாய்க்காலில் நடந்த கொடிய தாக்குதலை கண் முன் கொண்டு வருகிறது. இதில் ஒரு மாற்றம் முள்ளிவாய்க்காலில் கெதியற்றவர்கள் அழிக்கப்பட்டார்கள், இங்கு காக்கப்படுகிறார்கள் இதுதான் வேறுபாடு. இப்படம் திரையுலக வரலாற்றில் 21 ம் நூற்றாண்டின் அவதாரம் என்று போற்றப்பட வேண்டிய மேன்மை கொண்டது. அனைவரும் திரையரங்கு சென்று முப்பரிமாணத்தில் அதைக் காண வேண்டும்.

முப்பரிமாணத்தில் முன்னரும் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழில் 25 வருடங்களுக்கு முன்னரே மைடியர் குட்டிச்சாத்தான் என்ற படம் வந்து சக்கை போட்டது. ஆனால் இப்போது ஜேம்ஸ் கமரூன் தந்துள்ள முப்பரிமாணப் படம் அடுத்த கட்ட சினிமாவிற்கான பொன்னான படிக்கட்டாக உள்ளது. படத்தைப் பார்க்கப் போவோர் முதலில் இரு பரிமாணம், முப்பரிமாணம் என்றால் என்ன என்ற தகவலை சரியாக புரிந்து கொண்டு திரைக்குள் போக வேண்டும்.

திரைப்படத்தின் கதை

வேற்றுக்கிரகத்தில் மனிதர்கள்போல அதேவேளை நீண்ட காதுகளும், வாலும் உள்ள, நீல நிறமான மக்கள் கூட்மொன்று இருக்கிறது. இவர்கள் இருக்கும் இடத்திற்கு அடியில் விலை மதிக்க முடியாத வளம் இருக்கிறது. இம்மனிதர்களோடு சேர்ந்து அவர்களாகவே மாறி, உண்மையை புரிய வைத்து அவர்களை அங்கிருந்து அகற்றி, அந்த வளத்தை எடுக்க முயல்கிறது நல்லவர்கள் கூட்டம். அவர்களை அடியோடு அடித்து விரட்டி, சூறையாட முயல்கிறது வில்லன் கூட்டம். இரண்டு போராட்டங்களுக்கு இடையில் ஒரு காதல். இறுதியில் மாற்றுக்கிரக மனிதரை காதலே காப்பாற்றுகிறது. அன்பே வெல்லும் என்ற உண்மையையும், பகுத்தறிவுள்ளவன் என்று தன்னைப் பெருமைப்படுத்தும் மனிதனே பிரபஞ்சத்தில் மோசமானவன் என்ற முத்தாய்ப்பையும் உரைக்கிறது கதை.

திரைப்படத்தின் மையக் கதைக்கான தலைமைக் கோட்பாடு

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடே திரைக்கதை அமைவிற்கு அடிப்படை. இந்தப் பிரபஞ்சத்தில் ஈதர் என்ற வெளி நிலையாக இருக்கிறது. மற்றவை எல்லாம் அசைகின்றன என்பது சேர். ஐசாக் நியூட்டனின் விதியாகும். ஆனால் இக் கொள்கை தவறானது, நிலையான பொருள் என்று எதுவும் கிடையாது, ஈதர் வெளி என்பதும் வெறும் கற்பனையே, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கின்றன. நாமும் நாம் வாழும் இயற்கையும் வேறு வேறல்ல என்பதே ஐன்ஸ்டைன் கூறியதாகும்.

இந்தத் திரைப்படத்தில் மாற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு பேசுகிறார்கள். மரங்கள், பூக்கள், பறவைகள் எல்லாமே ஒன்றின் செய்தியை ஒன்று அறிந்து சார்பியல் கொள்கையில் இயங்குகின்றன. ஆனால் மனிதனோ தனக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி, ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கவில்லை என்று தப்பாகக் கணக்கிட்டு கொலைகளிலும் அழிவிலும் குதிக்கிறான். கடைசியில் ஆயுதக் கலாச்சாரத்தாலும், பொருளாதார, அரசியல் அதிகார வெறியாலும் கவரப்பட்ட மனிதன் பிரபஞ்சத்திலேயே ஒரு நாசமான படைப்பு என்று சொல்லாமல் சொல்லும் விதமாக கதைக் கோட்பாடு பின்னப்பட்டுள்ளது. ஒன்றே உலகம் என்ற கணியனின் கோட்பாடே ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையின் எதிர் பார்ப்பாக உள்ளது.

திரைப்பட ஜாலங்கள்

இந்தத் திரைப்படத்தில் பிரமாண்டமே தொடக்கம் முதல் முடிவுவரை நம்மை அதிசயிக்க வைக்கிறது. போதுமா போதுமா என்று கேட்டு கேட்டு பிரமாண்டங்களை கொட்டித்தள்ளுகிறார். கிராபிக்ஸ், ஒலி என்பன படைத்துள்ள சாதனைகள் அற்புதத்திலும் அற்புதமாக உள்ளன.

கற்பகத்தின் பூங்கொம்போ ! காமன் தன் பெரு வாழ்வோ !
புயல் சுமந்து விற்குவளை மதிமலர் பூத்த விரைக்கொடியோ!
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
அற்புதமோ சிவனருனோ அறியேனென்று அதிசயித்தார் !

என்று பெரிய புராணத்தில் பரவையாரைப் பார்த்து அதிசயித்த சுந்தரரின் கற்பனை வடிவிலான கற்பக மரங்கள் இங்கு அதைவிட அழகாக காட்சிக்கு வருகின்றன. நீலகண்டனான சிவனை ஒரு சிந்தனையாக வைத்து நீல நிறமான மனிதர்களை கமரூன் வடிவமைத்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

மேலும் கதாநாயகனை ஊனமுற்ற ஒருவனாக் காட்டும்போதே டைரக்டர் ஊனமுற்றுள்ள மனித மனத்தை சித்தரித்துவிட்டார். கதாநாயகன் மாற்றுக் கிரகத்தில் உருமாறி, கால் பெற்று, காதலித்து, இயற்கையை அனுபவித்து, பறவைகளில் ஏறி பயணித்து, காதலித்து காணும் இன்பங்கள் கோடி கோடி.. எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடலின் யதார்த்தத்தை கண் முன் நிறுத்துகிறார். இந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் வரவுள்ள புதுமைகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னரே திரையில் பயணிக்கின்றன. தமிழில் உள்ள புராணங்களை விஞ்சிய அழகுகளை முப்பரிமாணம் படைத்துக் கொட்டுகிறது. காதலின் மகத்துவத்தை புரிந்தவன் கொலைஞனாகமாட்டான், அவன் இயற்கையையும் நாசம் செய்ய மாட்டான் என்ற செய்தி கதையில் உள்ளது.

ஜீவனுள்ள காதல்

உலகம் முழுவதிற்குமே பொதுவான உணர்வு காதல்தான். டைட்டானிக் என்ற கப்பலை படமாக்கிய கமரூன் அங்கும் ஒரு ஜீவனுள்ள காதலை ஓடவிட்டு கதைக்கு வலுவூட்டினார். இங்கும் காதலே ஜீவநாடியாக உள்ளது. காதலுக்காக கதாநாயகன் உலகத்தையே கைவிட்டு மாற்றுக்கிரக வாசியாகவே மாறுகிறான். காதல் எத்தனை வலிமையானது என்பதை இங்கு அவர் சொல்லியுள்ளார். அன்று உலகமே வேண்டாம் காதலே வேண்டும் என்று உயிர் கொடுத்ததோடு ரோமியோ – யூலியட் முடிந்தது. ஆனால் இன்றோ உலகமே வேண்டாம் என்று விலகி காதலுக்காக ஒரு புதிய அற்புத உலகமே போகும் காதலரை தருகிறார் கமரூன். இன்னொரு பிறவி இருந்தால் மறுபடி சந்திப்போம் என்று பிரியும் காதலருக்கு, இன்னொரு உலகமே இருக்கிறது என்ற உன்னதத்தைத் தருகிறார். பன்னிரண்டு வருடங்களாக இதற்காகவே அவர் போராடியுள்ளார். 12 வருடங்களில் 100 வது படம் தருவேன் என்று கூத்தாடும் நம்மூர் நாயகர்களுக்கு 12 வருடங்களில் ஒரு படம் என்ற கமரூனின் முயற்சி நல்லதோர் பாடமாக அமைந்தால், நமது சினிமாவும் உயர்வு பெறும்.

குறைபாடுகள்

எல்லாமே பிரமாண்டமாக இருந்தால் அந்தப் பிரமாண்டமே ஓரிடத்தில் தெவிட்டிவிடும் நிலை வரும். லோட் ஒப் த றிங்ஸ் போன்ற பிரமாண்டமான தயாரிப்புகளில் இருந்த தெவிட்டல் இதிலும் சிறியளவில் உண்டு. பிரமாண்டங்களில் பரவசமடையும் ஒருவர் கதையைக் கோட்டைவிடவும் வாய்ப்புண்டு. இதுவரை அவதார் பற்றி தவறான கணிப்புகள் தமிழகத்தில் நிறைய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படம், திரைக்கதை, தொழில் நுட்பம், சினிமா என்ற மகத்துவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற பாதையில் கொலிவூட்டுக்கு கமரூன் புத்துயிர் கொடுத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. அடுத்த ஆண்டு டைட்டானிக் போல 11 ஆஸ்கார் விருதுகளை தட்டும் இப்படம் என்பதில் அதிக சந்தேகம் தேவையில்லை. 2009 ல் அவட்டாரை மிஞ்ச ஒரு பிரமாண்டமான படம் வரவில்லை.

நன்றி;-கி.செ.துரை

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?


சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.

ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.

இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.

Dec 18, 2009

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்

பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

Pavalapaarai பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்திசெய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,

மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச் செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப் போனது அவமானகரமான செய்தி அல்லவா?

புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத்தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நன்றி;-மு.குருமூர்த்தி

Dec 7, 2009

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?

உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!

'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.

'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!

நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும்.
குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.

முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.


ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.

'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.

முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.

சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.

மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல் படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.

அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.


அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.

இது என்னுடைய கருத்து மட்டுமே ஏற்கனவே நீங்கள் Probelm solving ங்கிற்கு சிறந்த நுட்பத்தை கையாண்டு வந்தால் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.