Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sep 28, 2011

அய்யனார்...


     அய்யனார் யார்? அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம். நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

     அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

     சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
     இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.
     ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

     எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.

Aug 21, 2009

கதை

கொஞ்சம் கதை கேட்போமா?

முதல் கதை:

பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை.
வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தனர். நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. இப்போதுதான் முதல் முறையாக குயவனுக்கு பயம் தோன்றியது.
பானைகள் எதையுமே விற்காவிட்டால் இன்றைய பொழுதை எப்படிக் கழிப்பது? அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாற கடவுளை திட்டத் தொடங்கினான். உன்னை நம்பினேனே, என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான்.
சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறை. குயவனுக்கு பொறி கலங்கிப் போனது.

"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."

குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.

இரண்டாவது கதை:

குருவிடம் சிஷ்யன் சொன்னான்.

"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."

சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.