Jun 9, 2011

தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது.....

‘குடும்பம் ஒரு கோயில்’ என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த கேள்வியை எழுப்புகிறது தொடர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன் – மனைவி உறவுச் சிக்கல்கள்.

“தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல்துறையில் அதிகம் பதிவாகின்றன” என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த ‘ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை’தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

ஏன் இந்த உறவு சிக்கல்கள்… இத்தனை உறவுச் சிக்கல்கள்?!

நிபுணர்கள் தரும் பதில்கள்… நம் கேள்வியின் அவசியத்தையும், அதற்கான தீர்வின் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன.

சமூகநீதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக தளராது குரல் கொடுத்து வரும் பேராசிரியை சரசுவதி, “ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்குமே இதுவரை சமூகம் கடைபிடித்து வந்த கட்டமைப்பை மீறுவதற்கான நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்டன. சமூகத்திலும் முன்பு இருந்த இறுக்கம் சில விஷயங்களில் தளர்ந்திருக்கிறது. அதை எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள், எல்லை மீறி, குடும்பச் சூழலை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

‘அவன், அதனால் இப்படிச் செய்தான்’, ‘இவள், இதனால் இந்த நிலைமைக்கு ஆளானாள்’ என்று தனி நபர் பிரச்னையாகப் பார்க்காமல், பெருகிவரும் இந்த பொதுப் பிரச்னையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டியதும், அதிலிருந்து மீள்வதற்கு வழி காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பு” என்று வழிகாட்டினார்.

“பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்” என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஆன்மிக சொற்பொழிவாளர் ‘நாகை’ முகுந்தன்.

“பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் வருவதற்கு முன்பு தனிநபர் ஒழுக்கம் பெரிய விஷயமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று கடவுள் பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது.