Jun 9, 2011

தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது.....

‘குடும்பம் ஒரு கோயில்’ என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த கேள்வியை எழுப்புகிறது தொடர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன் – மனைவி உறவுச் சிக்கல்கள்.

“தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல்துறையில் அதிகம் பதிவாகின்றன” என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த ‘ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை’தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

ஏன் இந்த உறவு சிக்கல்கள்… இத்தனை உறவுச் சிக்கல்கள்?!

நிபுணர்கள் தரும் பதில்கள்… நம் கேள்வியின் அவசியத்தையும், அதற்கான தீர்வின் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன.

சமூகநீதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக தளராது குரல் கொடுத்து வரும் பேராசிரியை சரசுவதி, “ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்குமே இதுவரை சமூகம் கடைபிடித்து வந்த கட்டமைப்பை மீறுவதற்கான நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்டன. சமூகத்திலும் முன்பு இருந்த இறுக்கம் சில விஷயங்களில் தளர்ந்திருக்கிறது. அதை எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள், எல்லை மீறி, குடும்பச் சூழலை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

‘அவன், அதனால் இப்படிச் செய்தான்’, ‘இவள், இதனால் இந்த நிலைமைக்கு ஆளானாள்’ என்று தனி நபர் பிரச்னையாகப் பார்க்காமல், பெருகிவரும் இந்த பொதுப் பிரச்னையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டியதும், அதிலிருந்து மீள்வதற்கு வழி காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பு” என்று வழிகாட்டினார்.

“பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்” என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஆன்மிக சொற்பொழிவாளர் ‘நாகை’ முகுந்தன்.

“பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் வருவதற்கு முன்பு தனிநபர் ஒழுக்கம் பெரிய விஷயமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று கடவுள் பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது.



ராமாயணம் போன்ற இதிகாசங்களில் ‘பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை’ என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் ‘மானம் பெரிது’ என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்கிற தீர்மானத்தைவிட ‘எப்படியும் வாழலாம்’ என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்” என்று பிரச்னையின் அடிநாதத்தை தொட்டார் முகுந்தன்.

“ஒரு சமூகம் பொருளாதாரத்தில் பெரிய மாறுதல்களை அடையும்போது இந்த மாதிரியான சமூக சிக்கல்கள் உருவாகத்தான் செய்யும்” என்று நிதர்சனமாக ஆரம்பித்த ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்’ வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, “கடந்த 10, 12 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய அளவிலிருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோதுகூட இத்தனை வளர்ச்சி இருந்ததில்லை. இம்மாதிரியான வளர்ச்சியில் பணப்புழக்கம் அதிகமிருக்கும்; நுகர்வுக் கலாசாரம் அதிகமாகும்; நகரமயமாதல் விரிவடையும்; பயணங்கள் அதிகரிக்கும். கூடவே இடம் பெயருவதும் அதிகரிக்கும்.

அதேசமயம்… ஓய்வு, நட்பு, குடும்பப் பிணைப்பு எல்லாமே குறைய ஆரம்பிக்கும். பிணைப்பு தளரும் சமூகத்தில் உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் வரும். முன்பு ஒரு சமூக அடையாளத்துடன் இயங்கி வந்தவர்கள், இன்று தனிநபர் அடையாளத்துடன் இயங்குவதும், குடும்பத்துடன் இல்லாமல் தனித்து வாழ்வதும் இம்மாதிரியான பிரச்னைகளை அள்ளித் தெளிக்கும்” என்று நடைமுறையை உடைத்துக் காட்டினார் வார்த்தைகளால்!

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தந்தார் டாக்டர் ஷாலினி.

“ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. ‘என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்’ என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, ‘என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை’ என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறா மல் போக, அந்த எதிர் பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.

அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.

இம்மாதிரியான ஒரு சூழல் பிரிட்டனில் உருவாகிய போது அந்த அரசு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, கணவன்-மனைவி உறவும், அவர்களின் தாம்பத்ய வாழ்வும் திருப்தியாக இருக்க ‘லவ்வர்ஸ் கைடு’ என்ற வழி காட்டி புத்தகத்தையும், சி.டி-யையும் வெளியிட்டது!” என்று சொல்லி யோசிக்க வைத்தார்.

குடும்பத்தைக் கட்டிக் காப்பது கணவன், மனைவி கடமை. அதேபோல் குடும்ப அமைப்பு பெருமளவில் சிதையும்போது, ஜப்பான், பின்லாந்து, நார்வே, சிங்கப்பூர் நாடுகளைப் போல் இந்த குடும்ப அமைப்பை காப்பதற்கான வழி வகை செய்வது, அரசின் தார்மிகக் கடமை!

வாழ்க்கை இனிக்க பிராக்டிகல் வழிகள்…


கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், ஆபீஸ் வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது… கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே ‘வாழும் கலை’.

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.

நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?
..

Thanks:  ஆர் சவுந்திர ராஜன் , பெங்களுர்

..

1 comment:

List of Colleges in India said...

Colleges in India, Studyguideindia, Top Best Medical Colleges, Engineering Colleges, Career Options India.

Colleges in India