Mar 27, 2010

ஆணென்ன....பெண்ணென்ன......

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள்.

ஒரு வகையில் பார்த்தால், நாம்தான்  இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்படுகிறரார்கள்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.என் பிள்ளைகள் அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.

No comments: