May 25, 2009

பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி.



காலையில் தேநீர்க் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே, மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் நாடு இப்போது உள்ளது மிகவும் வேதனையான ஒன்றுதான். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே போவதும் யாவருமறிந்ததே.

அத்தி பூத்தாற்போல, எப்போதாவது நண்பர்களோடு சிறிதளவு மது அருந்தி வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு; இப்போது குடித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தினமும் மட்டையாகும் அளவிற்கு குடித்தே அழிபவர்களும் உண்டு. இவர்களால்தான் குடும்பமே நிம்மதியிழந்து, பொருளாதாரத்தில் சீர்குலைந்து நடுத்தெருவிற்கே வந்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு.

ஏதோ ஒரு சில காரணங்களுக்காக குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் மீளமுடியாமல் இருப்பவர்கள், குடிப்பழக்கத்தைக் கைவிடுவதெப்படி?
இவர்களின் குடிப்பழக்கத்தைப் போக்குவதற்காக தங்களுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள் குடிப்பழக்கத்தை அறவே அகற்றிய "முன்னாள் குடிகாரர்கள்".

ஒருகாலத்தில் முழுநேரக் குடிகாரர்களாக இருந்து, இப்போது முழுமையாக குடிப்பழக்கத்திலிருந்து வெளிவந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் "ALCOHOLICS ANONYMOUS". இவர்களின் "Public Information Meeting" ஆனது வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
அமைப்பு தொடங்கிய மூன்றாவது ஆண்டில், மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக இதன் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள " முனைவர் எம்.ரமணிசுகுமார் " அவர்களிடம் பேசுகையில், குடிப்பழக்கமுள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டாலே, நாமும் இப்பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

இச்செய்தியை மக்களிடம் பரப்புவோம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட உதவுவோம்.

மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!